Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, May 10, 2008

மன்சூர் தர்காவிற்கு இந்துக்களின் நன்கொடை...MANZUR DURGAH OF THANJAVUR

தஞ்சாவூரில் நாயக்கர்களின் ஆட்சி மலர்ந்த ஆண்டு 1535. பேரரசர் அச்சுத தேவராயர் அவருடைய மனைவியின் தங்கை மூர்த்தி மாம்பா எனும் மூர்த்தி அம்மாவின் கணவரான செல்வப்பநாயக்கரை சோழநாட்டின் ஆட்சியாளராக (மகாநாயன்காரர்) நியமித்தார்.

1535 லிருந்து 1564வரை செல்வப்ப நாயக்கர் தனியாகவும், பின்பு அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கருடன் இணைந்து 1590 வரையும் ஆட்சிசெய்தார்.
செல்வப்பநாயக்கரின் கல்வெட்டுத்தூண் தஞ்சை இரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஷம்ஸ் மன்சூர் ஷாபீர் அவுலியா என்பாரது தர்க்காவில் முக்கிய நினைவுச்சின்னமாக அவுலியாவின் சமாதி அருகில் இன்றும் உள்ளது.

சாதாரண வருடம் மார்கழித் திங்கள் பதினான்காம் நாளாக சாசன நாள் குறிக்கப்பட்டுள்ளது. இது 1550 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமையைக் குறிப்பதாகும். தஞ்சை நகரில் திகழும் ஷம்ஸ்பீர் பள்ளி எனும் முகமதியர்களின் இந்த வழிபாட்டுத் தலத்தை நிருவகிக்கும் பக்கிரிகளிடம் நாஞ்சிக்கோட்டை மண்ணையர்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து ஏழுவேலி நிலத்தினைக் கொடையாகக் கொடுக்குமாறு செல்வப்ப நாயக்கர் உத்தரவிட்டார். அதன்படி

1. சிலம்பா மண்ணையார்
2 .வேல் மண்ணையார்
3. கோபால் மண்ணையார்
4. தம்பா மண்ணையார்
5 ........... மண்ணையார்


என்ற ஐந்து நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ஏழுவேலி நிலத்தை ஷம்ஸ்பீர் பள்ளிக்கு அளித்தனர். இந்த ஏழுவேலி நிலத்திற்கும் நான்கெல்லையும் குறிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கல்வெட்டு செல்வப்ப நாயக்கரின் சமயப்பொறையையும் அக்காலத்தில் நிலவிவந்த இந்து முஸ்லிம் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுகிறது.

ஆதாரம்: குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய "தஞ்சாவூர்"

Wednesday, April 9, 2008

செம்பியன் கண்டியூரில் ஒரு கற்கால ஆயுதம் கண்டுபிடிப்பு STONE AXE WITH INDUS VALLEY SCRIPT FOUND NEAR MAYILADUTHURAI

இந்துசமவெளி நாகரிக எழுத்துக்களுடன் கூடிய ஒரு புதிய கற்கால ஆயுதம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் என்ற கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வி.ஷண்முகநாதன் என்ற பள்ளி ஆசிரியர் தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் வாழைக்கன்று நடுவதற்கு குழி தோண்டியபோது இரண்டு கற்களாலான ஆயுதங்களைக்கண்டெடுத்தார். இந்த ஆயுதங்கள் கி.மு.1500 ஆம் ஆண்டைச்சேர்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓர் ஆயுதம் தஞ்சாவூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுதத்தின்மீது உள்ள நான்கு குறியீடுகள் உள்ளன. இக்கருவி கிடைத்த செம்பியன் கண்டியூரில் இரும்புக்காலத்தைச்சேர்ந்த தாழிகள், கருப்பு சிவப்பு மட்கலங்கள், குறியீடு பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள் மற்றும் எலும்புத்துண்டுகள், சாம்பல் நிற மட்கலங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வூரிலிருந்து கிழக்கே 5 கி.மீ.தொலைவில் உள்ள வாணாதிராஜபுரம், வடக்கே 2 கி.மீ. தொலைவிலுள்ள முருகமங்கலம் ஆகிய ஊர்களிலும் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கிடைத்துள்ள கருவியில் நான்கு பொறிப்புகள் உள்ளன. முதற்பொறிப்பு குத்திட்டு அமர்ந்த நிலையில் உள்ள மனிதவடிவுடையதாகவும்(ஹரப்பா எழுத்துக்களின் அகர பட்டியலில் எண்.48), அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும்(எண்.342), மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச்சூலம் போன்ற அமைதியிலும்(எண்.368), நான்காவது பொறிப்பு குத்திட்ட பிறைவடிவின் நடுவில் ஒரு வளையத்தினை இணைத்தது போலவும்(எண்.301) உள்ளது. எழுத்துக்களில் முதலிரண்டும், கூரிய கருவியால் தொடர்ந்த புள்ளியிட்டும், அடுத்தவை கீறலாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இடமிருந்து வலமாகவே பொறிக்கப்பட்டவை என்பதை இடப்புறமிருந்து வலப்புறமாக அழுத்தம் குறைவதிலிருந்தும், அளவில் பெரியதாகத் தொடங்கி வரவரச் சிறியதாக எழுதியிருப்பதில் இருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.

"இந்த நூற்றாண்டின் மிகமுக்கியமான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு இது" என்று உலகப்புகழ்பெற்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நிபுணர் திரு. ஐராவதம் மகாதேவன் இந்த இரண்டு கற்களைப்பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். இந்து சமவெளிநாகரிக எழுத்துக்கள் தமிழ்நாட்டையும் எட்டியிருந்தன என்பதுதான் நமக்குக்கிடைக்கும் புதிய செய்தி. "நான் மிக கவனமாக இந்த இரண்டு கற்களையும் ஆராய்ந்தேன். கி.மு. 1500க்கும் கி.மு.2000க்கும் இடைப்பட்ட காலத்தைச்சார்ந்ததாக இந்த கற்கள் இருக்கவேண்டும்" என்கிறார் திரு ஐராவதம் மகாதேவன். வட இந்தியாவில் இருந்து இந்த கற்கள் வந்திருக்கலாம் என்ற கூற்றை திரு ஐராவதம் மகாதேவன் உறுதியாக மறுத்தார். இந்த கற்கள் முழுக்கமுழுக்க தென்னிந்திய பாறைவகையைச்சேர்ந்தது என்றும் திரு ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

கற்களினாலான இரண்டு ஆயுதங்களில் ஒன்றில் மட்டும் எழுத்துக்குறியீடுகள் காணப்படுகின்றன. நான்கு குறியீடுகளில் முதலாவது குறியீட்டில் விலாஎலும்புகளுடன்கூடிய உடலமைப்பு காணப்படுகிறது. இரண்டாவது குறியீட்டில் ஒரு ஜாடி காணப்படுகிறது. இதைப்போன்ற நூற்றுக்கணக்கான அடையாளங்கள் ஹாரப்பாவில் காணப்படுகின்றன. திரு ஐராவதம் மகாதேவன் முதல் குறியீட்டை 'முருகு' எனவும் இரண்டாவது குறியீட்டை 'அன்' என்றும் இரண்டு குறியீடுகளும் சேர்ந்து 'முருகன்' என்ற சொல்லை உணர்த்துவதாக கூறுகிறார். பழந்தமிழ் செய்யுள்களில் முருகக்கடவுள் வேட்டையாடுபவராகவும், போர்க்கள கடவுளாகவும் சித்தரிக்கப்படுகிறார். மூன்றாவது குறியீடு சூலமாகவும் நான்காவது குறியீடு பிறையாகவும் காணப்படுகிறது.

சிறப்புகள்:
புதிய கற்காலக் கோடரி, சிந்து சமவெளி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை.
புதிய கற்காலப் பண்பாட்டுத்தமிழ் மக்களுக்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையேயான தொடர்பினை வலியுறுத்தும் கண்டுபிடிப்பு.
சிந்துவெளிப்பண்பாட்டு நாகரிகக் கூறுகள் கோதாவரி ஆற்றுக்கும் தெற்கே பரவி இருந்ததற்கான உறுதியான சான்று.
தமிழகத்தில் சிந்துவெளிப்பண்பாட்டுப் பரவலுக்கான நேரடிச்சான்று
ஹரப்பன் எழுத்துக்களின் காலக்கணக்கீட்டுக்கு உதவும் நேரடிச்சான்று
வடக்கு தக்காணத்தில் நிலை பெற்றிருந்த் ஹரப்பா பண்பாட்டினரோடு தமிழர்கள் கொண்டிருந்த தொடர்புக்கான சான்று.
தமிழரின் எழுத்துத்தொன்மையினை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த சான்று.

எந்த ஒரு கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்போ முன்வைக்கப்படும்வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம். தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞானபூர்வமான சான்றுகள் ஆகும்.தன்னிகரில்லாத நம் தமிழ்மொழி குறித்துப் பெருமை கொள்வோம்.
மேலும் படிக்க விரும்புவோருக்கு
http://www.tn.gov.in/misc/Archaeological_discovery.htm
http://kalyan96.googlepages.com/Sembiyankandiyurcelttool.pdf

தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Sunday, April 6, 2008

கும்பகோணம் வெற்றிலை KUMBAKONAM BETAL LEAF

தஞ்சாவூர்க்காரர்கள் வெற்றிலைப்பிரியர்கள். சரியாகச்சொல்வதானால் வெற்றிலை வெறியர்கள். அவர்கள் வெற்றிலை போடும் அழகே தனி. வெற்றிலையை வலிக்காமல் எடுப்பதும், அதற்கு வலிக்காமல் முதுகைத் தடவிக்கொடுப்பதும், சுண்ணாம்பை நடுவிரல் நுனியால் ஓவியம் வரைவதுபோல் தீட்டுவதும், மெதுவாக மடக்குவதும், பாக்கை வாசனை பார்ப்பதுவும்,......போதும்.........இதெல்லாம் எதற்காக தெரியுமா?........அடுத்து செய்யப்போகும் காரியத்தை அலசி ஆராய்வதற்காகத்தான்....

வெற்றிலைக்கும் நமக்கும் தொடர்பு அதிகம். கல்யாணம் தொடங்கி காட்டுக்குப் போகும்வரை வெற்றிலை நம்முடன் கூடவே வரும். தமிழ்நாட்டில் கும்பகோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது. இத்தனை ஊர்கள் இருக்கும்போது வெற்றிலைக்கு கும்பகோணத்தின் மேல் மட்டும் காதல்!
வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். கும்பகோணத்திற்கு வந்த முதல் காம்பு எந்த ஊரிலிருந்து வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராவது நிச்சயம்.

கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள். இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களுக்கெல்லாம் கற்பனை ஊற்று சுரக்க வெற்றிலையும் ஒரு காரணமாம். விஞ்ஞானத்துக்கும் எட்டாத காரணம் என்று வியப்பாக இருக்கிறதல்லவா!

வெற்றிலைபோடும் ரசனையை வெற்றிலையின் ரசிகர்களால் தான் நன்றாக வெளிப்படுத்தமுடியும். தஞ்சாவூர் தந்த எழுத்தாளர் ஜானகிராமன் எழுதிய 'வேதாந்தியும் உப்பிலியும்' என்றொரு சிறுகதை. வெற்றிலை போடுபவருக்கும், வெற்றிலை வாங்குபவருக்கும் நடக்கும் உரையாடலைப் படியுங்கள். நீங்களும் வெற்றிலையின் ரசிகராகிப் போவீர்கள்!

"நேத்து ஒரு கவுளி கொடுத்தே......அதென்ன வெத்தலையா கறிவேப்பிலையா? எல்லாம் துக்கினியூண்டு, துக்கிணியூண்டு.....! சுண்ணாம்புக்கலயத்தை கழுத்தில் கட்டிக்கவேண்டியிருந்தது. போதும் போதாத்துக்கு ஒரு மருமான் வந்து சேர்ந்தான் மாயவரத்துலேர்ந்து! ஒரு மணிக்கு கால் கவுளின்னு
அரைத்துத்தீர்த்துப்பிட்டான்!"

"மாயவரத்து ஆளுங்களுக்கு காப்பி கொடிக்கால் வெத்தல போட்டுப்பழக்கம். நர...நரன்னு மாடு கடிக்கிறாப்புல கடிக்கணும். துருப்பிடிச்ச டின்னுகணக்கா......கருப்பா....மொத்தமா இருக்கும். இந்தமாதிரி குஞ்சுங்களெ எங்க கண்டிருப்பாங்க! இத வாயிலெ போட்டா புள்ளியார்பட்டி வெள்ளரிப்பிஞ்சு. இதுக்கு பல்லா வேணும்? பொக்க வாயெ ஒரு தடவெ அப்படி லேசா அசைச்சிட்டாலே அப்படியே அரைஞ்சு அமிர்தம் ஊறுமே......."

"அது சரிய்யா....குஞ்சு, குஞ்சுன்னு சுண்ணாம்புக்கலயத்தையேவா கழுத்துல கட்டிக்கவிடறது.....? நீயே பாரு. தோ....இந்த உள்ளங்கையிலே மூணு வெத்தலை வெச்சுண்டுட்டேன். இந்த வெத்தலைய பரமக்குடிக்காரன் மாதிரி நிறையிலே வாங்கினாத்தான் கட்டும். இப்படி எண்ணி எண்ணி வாங்கினா நூறு வெத்தல நாலு தடவைக்குத்தான் வரும்!"
நன்றி: தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com