Showing posts with label சமூகம் விழாக்கள். Show all posts
Showing posts with label சமூகம் விழாக்கள். Show all posts

Saturday, April 5, 2008

ஆரூர் ஆழித்தேர் THIRUVARUR TEMPLE CAR

திருவாரூர் பெரியகோயில் பிரமாண்டங்களுக்கு பெயர் போனது. சைவசமய மரபில் பெரியகோயில் என்றால் திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலையே குறிக்கும். கோயிலின் பரப்பளவு 5 வேலி. கமலாலயம் என்றழைக்கப்படும் குளம் 5 வேலி.செங்கழுநீர் ஓடை 5 வேலி. கோயிலுக்கு சொந்தமான ஆழித்தேரின் எடை 220 டன்.
பிரமாண்டங்களையும் பிரமிக்கச்செய்யும் ஆழித்தேர் உலகில் உள்ள மற்ற தேர்களிலிருந்து வித்தியாசமானது. விஸ்வரூபமானது.

தொன்மை, கலைநயம், வடிவமைப்பு, பிரமாண்டம் ஆகியவற்றால் தஞ்சாவூரின் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களைப் பதித்துள்ள ஆழித்தேரின் சிறப்புகள் அளப்பரியது.
வியத்தகு ஆழித்தேரைக்கொண்ட அருள்மிகு தியாகராஜசுவாமிக்கு 'ஆழித்தேர் வித்தகர்' என்ற பெயரும் உண்டு.

பெரும்பாலான தேர்களின் விமானங்கள் அறுபட்டை, எண்பட்டைகளைக் கொண்டதாக இருக்கும். அல்லது வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆழித்தேர், பீடம் முதல் விமானம் வரை நான்கு பக்கங்களும் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஐந்து பட்டைகளும் கொண்டிருக்கும்.
அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி. விமானம் வரை தேர்ச்சீலைகள் அலங்கரிக்கப்படும் பகுதியின் உயரம் 48 அடி. விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி. மொத்த உயரம் 96 அடி

அலங்காரப்பொருட்கள்:
பெரிய குதிரைகள்-4, ரிஷபம்-8, யாளம்-1. பாம்புயாளம்-2, பிரம்மா-1 துவாரபாலகர்-2, கமாய் கால்-2, மேல்கிராதி-4, கீழ்கிராதி-2, பெரியகத்தி,கேடயம்-2, பூக்குடம்-16, ராஜா, ராணி-2, முதியவர்-மூதாட்டி-2, சுருட்டி-4, இலை-8, பின்பக்க கமாய் கால்-6, அம்பாரத்தோணி-2 உள்பட சுமார் 5 டன் எடையுள்ள 68 அலங்காரப்பொருட்கள் ஆழித்தேரில் பொருத்தப்பட்டு அழகுக்கு அழகூட்டப்படுகிறது.
இவற்றைத்தவிர கட்டுமானப்பொருட்களாக பயன்படும் 5 டன் பனஞ்சப்பைகள், 500 கிலோ துணிகள், 50 டன் எடையுள்ள கயிறு ஆகியவையும் அடக்கம்.
தேரை எளிதாக இயக்கவும், திருப்பவும் 1971 ஆம் ஆண்டு திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் மூலம் இரும்புச்சக்கரங்களும், ஹைட்ராக்லிக் பிரேக்கும் பொருத்தப்பட்டன.
ஆழித்தேரின் வடம்கூட தேரின் சிறப்பைக்கூறும். தேரில் பொருத்தப்படும் வடத்தின் சுற்றளவு 21 அங்குலம். 425 அடி நீளம் கொண்ட நான்கு வடங்களை இணைத்து பக்தர்கள் இழுக்க அசைந்தாடும் ஆழித்தேரோட்டத்தைக்காணக் கண் கோடி வேண்டும்.
பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையிலிருந்த ஆழித்தேரை சீரமைத்து மீண்டும் இயக்கியதன் மூலம் ஆழித்தேரின் வரலாற்றுப்பக்கங்களில் படிய இருந்த தூசைத் தட்டிய பெருமை திராவிட முன்னேற்றக்கழக அரசைச் சாரும்.
பக்தர்கள் மட்டுமல்லாது, அயலநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வியந்து போற்றும் ஆழித்தேரால் மாவட்டத்திற்கு மட்டுமல்ல.....தமிழ்நாட்டிற்கே பெருமை.

நன்றி:தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி. cauverynagarwest@gmail.com