Monday, April 14, 2008

தஞ்சை வட்டார வழக்கு THE DIALECT OF THANJAVUR

'திண்ணை வீரா' என்றொரு சிறுகதை.
தி.ஜானகிராமன் எழுதியது.
தன்னுடைய வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்தபடி ஊர்வழக்குகளைத்தீர்த்து வைக்கிறார் ஒரு பெரிய மனிதர்.
அந்த பெரிய மனிதருக்கும் கடனைத்திருப்பிக்கொடுக்காதவனுக்கும் நடக்கும் உரையாடலைப் படியுங்கள். தஞ்சை வட்டார வழக்கு உங்களுக்கு பிடித்துப்போகும்.

"எல என்ன கட்டை ரொம்பத் துளுத்துப்போச்சு? ம்ஹும், சீ......கையைக் கீளப்போடு.......ஏண்டல, கணக்குத்தீக்க அம்மாசிக்கே வரேன்னு சொன்னியால்லியாடா?.......ஏண்டா! சொன்னியால்லியாடா? சொன்னியால்லியாடா? ஏண்டா சும்மா நிக்கிறியே? ஏல, உன்னத்தாண்டா.......ஏன், பேசமாட்டியா? இப்ப....எழுந்து வந்தேனோ.....?"

"அம்மாசிக்குத்தான் என் மாமியா இளுத்துக்கிட்டு கிடந்துச்சுங்க. காலங்காட்டியும் கிளம்பிவரணும்னுதான் படுத்தேன். ரண்டு சாமத்துக்கு ஆள் வந்துருச்சு......முன்னெத்தி மயிரைப்புடிச்சாத்தெரியாதுங்க.....அப்படி இருட்டு கும்பிக்கிட்டு இருந்தது. அதிலேயே உளுந்தடிச்சிகிட்டுப் போனோம். விடிஞ்சு போய் சேர்ரதுக்குள்ளாக திருவாலூர் ஆசுபத்திரிக்குத் தூக்கிட்டுப்போயிட்டாங்களாம். அப்புறம் மேலே போயி.......அவதியாப்பூட்டுங்க....."

"சரி, அப்புறம்? மருமவன் கைராசிதான் மாமியா பொளச்சுகிட்டா. சரி. உடனே வர்றதுக்கென்னவாம்? அம்மாசி போயி பதினோரு நாளாச்சிடா?"

"போன இடத்திலே டாகுட்டருக்கும் மருந்துக்கும் நாப்பது ரூவாக்கு மேலே போயிடுச்சுங்க. அப்புறம் மேலே......."

"சரி. எடு பணத்தை!"

"அதாங்க சொல்ல வந்தேன்.....இந்த மருந்து செலவு ரொம்ப அடாபுடியாப் பூட்டுங்க.....!"

"அதுக்காக......?"

"இந்த மார்களி முச்சூம் பொறுத்துக்கிட்டா, பொங்கல் களிஞ்சு மூணா நா கொண்டாரெனா இல்லியா பார்த்துக்கங்க..."

"ஏல, இஞ்ச வா இப்படி வாடாங்கறேன். வாடா இப்படி வரமாட்டியா? இப்ப எழுந்துவந்தேனோ, தெரியுமா?"

பந்தல் காலடியில் நின்ற ஆசாமி திண்ணைப்பக்கம் போனான்.

"இஞ்ச வாடா இப்படி......இப்படி கிட்ட வாடா, வரமாட்டே! இப்ப எழுந்து வந்தன்னா பாத்துக்க...."

ஆசாமி அருகில் போனான்.

"போட்டுக்கடா......என்னடா பாக்கிறியே? கன்னத்திலே போட்டுக்கடாங்கிறேன்......பளார் பளார்னு நாலு போட்டுக்கணும். மாட்டியா? நான் தான் போடணுமா?"

ஆசாமி பளார் பளார் என்று கன்னத்தில் நாலு போட்டுக்கொண்டான்.

"போட்டுக்கிட்டியா?.....இதைக்கையில எடு......எடுத்துக்கிட்டியா? என்னிக்குப் பணம் கொண்டாரே?"

"தை மாசம் நாலாம் தேதி."

"நிச்சயமா?"

"நிச்சயமா."

"கிழக்கே பாத்துக்கிட்டு சொல்லுறே பாத்துக்க. கையிலே எடுத்துக்கிட்டு நிக்கிறியே .....அது என்ன தெரியுமாடா?

"பொய்த்தவம்."

"பொய்த்தவமில்லேடா, பொஸ்தகம்......சும்மா தங்கமத்தில்லால இல்லே. திருமுருகாற்றுப்படை. சுப்பிரமணியசாமி இருக்குறார் பாரு. அவர் மேலே பாடின பாட்டுங்க. அத கையிலே வச்சுக்கிட்டு கிழக்கைப்பாத்துக்கிட்டு, தைமாசம் நாலம் தேதி கொண்டாரேன்னு சொல்லியிருக்கே. ஜாக்ருதெ. பயலே, தேதி தப்பிச்சோ, கண்ணைப்பிடுங்கிப்புடுவாரு சுப்ரமணியரு! உஜாரா இரு.....தெரிஞ்சுதா? ஏய், செவுத்தியான்! கேட்டுக்கிட்டியா, தைமாசம் நாலாம் தேதின்னு சொல்றான்....சவநாது. நீயும் கேட்டுக்க!"

"கேட்டுதுங்க" என்று பந்தல் ஓரத்திலிருந்து இரண்டு ஆட்கள் சாட்சி சொன்னார்கள்.

நன்றி:தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

No comments: