Wednesday, April 9, 2008

செம்பியன் கண்டியூரில் ஒரு கற்கால ஆயுதம் கண்டுபிடிப்பு STONE AXE WITH INDUS VALLEY SCRIPT FOUND NEAR MAYILADUTHURAI

இந்துசமவெளி நாகரிக எழுத்துக்களுடன் கூடிய ஒரு புதிய கற்கால ஆயுதம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் என்ற கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வி.ஷண்முகநாதன் என்ற பள்ளி ஆசிரியர் தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் வாழைக்கன்று நடுவதற்கு குழி தோண்டியபோது இரண்டு கற்களாலான ஆயுதங்களைக்கண்டெடுத்தார். இந்த ஆயுதங்கள் கி.மு.1500 ஆம் ஆண்டைச்சேர்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓர் ஆயுதம் தஞ்சாவூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுதத்தின்மீது உள்ள நான்கு குறியீடுகள் உள்ளன. இக்கருவி கிடைத்த செம்பியன் கண்டியூரில் இரும்புக்காலத்தைச்சேர்ந்த தாழிகள், கருப்பு சிவப்பு மட்கலங்கள், குறியீடு பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள் மற்றும் எலும்புத்துண்டுகள், சாம்பல் நிற மட்கலங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வூரிலிருந்து கிழக்கே 5 கி.மீ.தொலைவில் உள்ள வாணாதிராஜபுரம், வடக்கே 2 கி.மீ. தொலைவிலுள்ள முருகமங்கலம் ஆகிய ஊர்களிலும் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கிடைத்துள்ள கருவியில் நான்கு பொறிப்புகள் உள்ளன. முதற்பொறிப்பு குத்திட்டு அமர்ந்த நிலையில் உள்ள மனிதவடிவுடையதாகவும்(ஹரப்பா எழுத்துக்களின் அகர பட்டியலில் எண்.48), அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும்(எண்.342), மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச்சூலம் போன்ற அமைதியிலும்(எண்.368), நான்காவது பொறிப்பு குத்திட்ட பிறைவடிவின் நடுவில் ஒரு வளையத்தினை இணைத்தது போலவும்(எண்.301) உள்ளது. எழுத்துக்களில் முதலிரண்டும், கூரிய கருவியால் தொடர்ந்த புள்ளியிட்டும், அடுத்தவை கீறலாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இடமிருந்து வலமாகவே பொறிக்கப்பட்டவை என்பதை இடப்புறமிருந்து வலப்புறமாக அழுத்தம் குறைவதிலிருந்தும், அளவில் பெரியதாகத் தொடங்கி வரவரச் சிறியதாக எழுதியிருப்பதில் இருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.

"இந்த நூற்றாண்டின் மிகமுக்கியமான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு இது" என்று உலகப்புகழ்பெற்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நிபுணர் திரு. ஐராவதம் மகாதேவன் இந்த இரண்டு கற்களைப்பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். இந்து சமவெளிநாகரிக எழுத்துக்கள் தமிழ்நாட்டையும் எட்டியிருந்தன என்பதுதான் நமக்குக்கிடைக்கும் புதிய செய்தி. "நான் மிக கவனமாக இந்த இரண்டு கற்களையும் ஆராய்ந்தேன். கி.மு. 1500க்கும் கி.மு.2000க்கும் இடைப்பட்ட காலத்தைச்சார்ந்ததாக இந்த கற்கள் இருக்கவேண்டும்" என்கிறார் திரு ஐராவதம் மகாதேவன். வட இந்தியாவில் இருந்து இந்த கற்கள் வந்திருக்கலாம் என்ற கூற்றை திரு ஐராவதம் மகாதேவன் உறுதியாக மறுத்தார். இந்த கற்கள் முழுக்கமுழுக்க தென்னிந்திய பாறைவகையைச்சேர்ந்தது என்றும் திரு ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

கற்களினாலான இரண்டு ஆயுதங்களில் ஒன்றில் மட்டும் எழுத்துக்குறியீடுகள் காணப்படுகின்றன. நான்கு குறியீடுகளில் முதலாவது குறியீட்டில் விலாஎலும்புகளுடன்கூடிய உடலமைப்பு காணப்படுகிறது. இரண்டாவது குறியீட்டில் ஒரு ஜாடி காணப்படுகிறது. இதைப்போன்ற நூற்றுக்கணக்கான அடையாளங்கள் ஹாரப்பாவில் காணப்படுகின்றன. திரு ஐராவதம் மகாதேவன் முதல் குறியீட்டை 'முருகு' எனவும் இரண்டாவது குறியீட்டை 'அன்' என்றும் இரண்டு குறியீடுகளும் சேர்ந்து 'முருகன்' என்ற சொல்லை உணர்த்துவதாக கூறுகிறார். பழந்தமிழ் செய்யுள்களில் முருகக்கடவுள் வேட்டையாடுபவராகவும், போர்க்கள கடவுளாகவும் சித்தரிக்கப்படுகிறார். மூன்றாவது குறியீடு சூலமாகவும் நான்காவது குறியீடு பிறையாகவும் காணப்படுகிறது.

சிறப்புகள்:
புதிய கற்காலக் கோடரி, சிந்து சமவெளி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை.
புதிய கற்காலப் பண்பாட்டுத்தமிழ் மக்களுக்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையேயான தொடர்பினை வலியுறுத்தும் கண்டுபிடிப்பு.
சிந்துவெளிப்பண்பாட்டு நாகரிகக் கூறுகள் கோதாவரி ஆற்றுக்கும் தெற்கே பரவி இருந்ததற்கான உறுதியான சான்று.
தமிழகத்தில் சிந்துவெளிப்பண்பாட்டுப் பரவலுக்கான நேரடிச்சான்று
ஹரப்பன் எழுத்துக்களின் காலக்கணக்கீட்டுக்கு உதவும் நேரடிச்சான்று
வடக்கு தக்காணத்தில் நிலை பெற்றிருந்த் ஹரப்பா பண்பாட்டினரோடு தமிழர்கள் கொண்டிருந்த தொடர்புக்கான சான்று.
தமிழரின் எழுத்துத்தொன்மையினை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த சான்று.

எந்த ஒரு கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்போ முன்வைக்கப்படும்வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம். தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞானபூர்வமான சான்றுகள் ஆகும்.தன்னிகரில்லாத நம் தமிழ்மொழி குறித்துப் பெருமை கொள்வோம்.
மேலும் படிக்க விரும்புவோருக்கு
http://www.tn.gov.in/misc/Archaeological_discovery.htm
http://kalyan96.googlepages.com/Sembiyankandiyurcelttool.pdf

தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

No comments: