Friday, October 10, 2008

கும்பகோணம் பூரியும் பாசந்தியும் (KUMBAKONAM0



கோவில் நகரம், கலைகளின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் கும்பகோணத்திற்கு முகவுரை தேவையில்லை.
இசைக்கலைஞர்கள், சிற்பக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களுக்கெல்லாம் பிடித்துப்போன புண்ணிய பூமி இது.
கொழுந்து வெற்றிலை, பன்னீர்ப்புகையிலை, வாசனை சுண்ணாம்பு, ஊதிபத்திகள், சாம்பிராணி, சந்தனம், பூக்கள், நாட்டு மருந்துகள் என எல்லாம் கலந்த ரம்மியமான மணம் நிறைந்த ராமசாமிகோயில் சன்னதித்தெருவில் ஒரு முக்கியமான கடை "முராரி ஸ்வீட்ஸ்" இந்தக்கடையின் வயது 93.
கும்பகோணத்திற்கென்று தனியாக ஒரு சாப்பாட்டு புராணம் எழுதலாம். தவில் சக்கரவர்த்தி தங்கவேல் பிள்ளைக்கு வெங்கடா லாட்ஜ் அல்வா என்றால் உயிர். பிடில் சக்கரவர்த்தி ராஜமாணிக்கம் பிள்ளையும், நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையும் தேடிப்போவது பசும்பால் பஞ்சாமி அய்யர் காப்பிக்கடையைத்தான்.
எழுத்தாளர் தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு ஆகியோருக்கு காந்திபூங்காவில் சந்திப்பு. சந்திப்பு முடிந்தவுடன் அவர்களுக்கு இட்லி வேண்டும். மங்களாம்பிகாவில் இட்லி சாப்பிடணும். கூடவே மிளகாய்ப்பொடியும் வேண்டும்.
கலைஞர்கள் வயிறு நிறைந்தவுடன் மறக்காமல் சமையல் கலைஞர்களை பாராட்டிவிட்டுச்செல்வார்கள். கும்பகோணத்திற்குரிய பண்பு இது.
நம்முடைய பூரி-பாசந்தி கதையைப் பார்ப்போம்.
நம்முடைய உணவில் பூரி அண்மைக்கால வரவு. ஆரம்பத்தில் நயமான கோதுமையில் பிறப்பெடுத்த பூரி இப்போது மைதாவில் அடைக்கலமாகி இருக்கிறது. ஆரம்பத்தில் பூரிக்கு தொட்டுக்கொள்ள பாசந்தி துணைக்கு வந்தது. இப்போதெல்லாம் பூரி என்றவுடன் அடுத்தசொல் உருளைக்கிழங்கு என்றுதான் வாயில் வருகிறது.
பால் சுண்டும்போது மங்கிய வெண்மையும் குங்குமப்பூ நிறமும் கலந்த மெல்லிய மங்கல்நிற பாசந்தி பிறப்பெடுக்கும். சுடச்சுட கோதுமைப் பூரியைப்பிய்த்து பாசந்தி பாலேட்டில் தொட்டு சாப்பிடும் ருசி இருக்கிறதே...ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்.
ஆனால் கும்பகோணம் முராரி ஸ்வீட்ஸில் இன்றும் பூரி பாசந்தி கிடைக்கிறது. பூரிக்கு தொட்டுக்கொள்ள, கேட்டால் பாசந்தி தருகிறார்கள். உத்திரப்பிரதேசத்தைச்சேர்ந்த தேர்ந்த சமையல் கலைஞரான முராரிலால் சேட் 1915ல் தொடங்கிய கடை இது. இப்போது அவருடைய மகன்களின் நிர்வாகத்தில் கடை நடைபெறுகிறது.
பூரி-பாசந்திக்கு பக்குவம் என்ன?
கடைக்காரரின் பதில்:
"பத்து பங்கு பால். அரைப்பங்கு ஜீனி. இரண்டும் சேர்ந்து மூன்றரைப்பங்கு பாலாடையாக சுண்டவேண்டும். இறக்கும் பதத்தில் கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்துக்கொள்ளுங்கள். பாசந்தி ரெடியாகிவிடும். நயமான பஞ்சாப் கோதுமை மாவில் வெந்நீர்விட்டு 20 நிமிஷங்கள் பிசைந்து, 20 நிமிஷம் ஈரத்துணிபோட்டு போர்த்தி புளிக்கவிட்டு போட்டு எடுத்தால் பூரியும் தயாராகிவிடும்."
பூரியை பிய்த்து பாசந்தியில் தொட்டு வாயில் வைத்தால் கரைந்து வயிற்றுக்குள் இறங்கும் அனுபவம் ஒரு ஆனந்தம்.
ஆமாம், நீங்கள் நினைப்பதுதான் சரி.
கும்பகோணத்தில் எல்லாக்காலங்களிலும் அற்புதக்கலைஞர்கள் யாராவது இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
நன்றி: தினமணி
தகவல்: மு.குருமூர்த்தி
cauverynagarwest@gmail.com

வடசேரிக்காரர்களின் பட்டாணிக்கடை (VADASERI)




தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி கிராமத்தைச்சேர்ந்தவர்கள்தான் சென்னையில் பட்டாணித்தொழில் செய்யும் பிரபலமானவர்கள். மா.ஏழுமலைத்தேவர் என்பவர் வடசேரி கிராமத்தைச்சேர்ந்தவர். இவருடைய பேட்டி தினமணியில் வெளியானது. அதன் சாராம்சம்.
திருவொற்றியூர், அம்பத்தூர், மாதவரம், தாம்பரம், பொன்னேரி, மீஞ்ஞூர், கும்மிடிப்பூண்டி முதல் நெல்லூர் வரை பட்டாணிக்கடைகளை நடத்திவருகிறவர்கள் பெரும்பாலும் வடசேரி கிராமத்தைச்சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
மார்க்கெட் இருக்கும் இடத்தில் இவர்களின் கடை இருக்கும். ஒருவர் கடை வைத்திருக்கும் மார்க்கெட்டில் இன்னொருவர் கடை வைக்கமாட்டார்களாம். மூதாதையர் காலத்தில் இருந்து கடைபிடித்துவரும் வியாபார ஒழுக்கம் இது.
1857ல் தான் சென்னை மெமோரியல் தெருவில் கனகசபைத்தேவர் என்பவர் முதன்முதலாக பட்டாணிக்கடையைத்தொடங்கினார். காவிரியில் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகு அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்தைச்சேர்ந்த மன்னார்குடி பகுதி 10 ஆண்டுகள் தொடர் பஞ்சத்தில் சிக்கியதாம். அப்போது பிழைப்புத்தேடி வெளியேறியவர்கள் இன்று பட்டாணிக்கடை வியாபாரத்தில் காலூன்றி நிற்கிறார்கள்.
வறுத்த பட்டாணி, உப்புக்கடலை, உடைத்த கடலை, பொரிகடலை இவற்றின் சுவை, பக்குவம் இவற்றிற்கெல்லாம் முதற்படி அடுப்புதான். இளஞ்சூடாகவும் வெப்பம் அதிகரிக்காமலும் இருக்க பல நுணுக்கங்களை இவர்கள் கையாளுகிறார்கள். வறுக்கப்பயன்படும் மணலும் முக்கியமானது. ஆறுகளில் இருந்தும், கடற்கரையில் இருந்து எடுக்கப்பட்ட மணலை சலித்து குறுமணலாக்கி பட்டாணியை வறுக்க பயன்படுத்துகிறார்கள். மணல் பெரிதாக இருந்தால் வெப்பத்தில் வெடிக்குமாம்.
முதலில் பட்டாணியை சூடுபடுத்துவார்கள். அதனை முறத்தில்போட்டு மஞ்சள், உப்புக்கரைசலை தெளிப்பார்கள். அடுப்பில் உள்ள மணலில் போட்டு இளஞ்ஞூட்டில் பக்குவமாக வறுத்தெடுத்தால் மஞ்சள் நிற பட்டாணி தயார்.
உடனுக்குடன் தயாரித்து விற்கும் இந்த வியாபாரம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, மழைக்காலம் ஆகிய நாட்களில் சூடு பிடிக்கிறது.
பல நவீன இயந்திரங்கள் வந்துவிட்டாலும் கைப்பக்குவத்தை நம்பித்தொழில் செய்யும் வடசேரிக்காரர்கள் அசகாய சூரர்கள்தான்.
தகவல்: மு.குருமூர்த்தி
cauverynagarwest@gmail.com

Monday, September 29, 2008

ஒரு நாளில் 5000 டீ போடும் மன்னார்குடி (MANNARGUDI) நேதாஜி

ஓரு டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் எத்தனை டீ தயாரிக்கமுடியும்? ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியைச்சேர்ந்த டீ போடும் தொழிலாளி ஒரு நாளில் 5000 டீ போடுவதாக தினமணியில்
செய்தி வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகமாக டீ போடும் அந்த தொழிலாளியின் பெயர் நேதாஜி. ஒரு நாளைக்கு 5000 டீ
போடுவது பெரிய செய்தியில்லை அவருக்கு. அந்த 5000 டீயையும் ஒரே ருசியுடன் தருவதுதான் செய்தி.
அவருடைய டீக்கடை அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்படுகிறது. நண்பகலில் சற்று ஓய்வு. பிறகு சதா
சர்வ நேரமும் டீ...டீ...டீ..தான்.
மற்ற கடைகளைவிட இவருடைய கடையில் டீயின் விலை 50 பைசா கூடுதல். கூட்டத்துக்கு குறைவில்லை.
"கறவைப்பால் மட்டும் வாங்குகிறோம். இரண்டு அடுப்பு இருக்கும். ஒன்று தண்ணீர் கலக்காத பால் கொதிக்க.
இன்னொன்றில் ஒன்றுக்கு மூன்று என்கிற கணக்கில் தண்ணீர் கலந்த பால் கொதித்துக்கொண்டிருக்கும். டிக்காக்க்ஷனை தண்ணீரில் போடமாட்டோம். இரண்டாவது பாலில் போடுவோம். டிக்காக்க்ஷன் தயாரானதும் பழுக்கக்காய்ச்சிய முதல் பாலை சேர்த்தால் நேதாஜி பிராண்ட் டீ தயார்" என்கிறார்.
டீத்தூள் அதிகம் வேகக்கூடாதாம். பாலை நன்கு கொதிப்பேற்ற வேண்டுமாம். நல்ல டீ போட விரும்புவோருக்கு நேதாஜி தரும் டெக்னிகல் அட்வைஸ்.
நீங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்தார் வரிசையில் கடைசி இடம்தான் உங்களுக்கு. பேசுவதை நிறுத்திவிட்டு வரிசையில் போய் நின்று கொள்ளுங்கள்.
நன்றி:தினமணி

cauverynagarwest@gmail.com

Friday, June 20, 2008

ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளமங்கலம் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் கோயிலின் எதிரே மிகப்பெரிய குதிரை சிலை ஒன்று உள்ளது.
ஒரு உண்மையான குதிரை வானவெளியில் தாவிச்செல்ல முன்னிரு கால்களையும்
தூக்கினால், அதன் அங்க அமைப்பு, சதைமடிப்பு, நரம்புத்துடிப்பு எப்படியிருக்குமோ அதே
நிலையில் அழகான கலை நுட்பத்துடன் 33 அடி உயர குதிரை சிலை அய்யனார் சன்னதிக்கு எதிரில் நிற்கிறது.

ஆசியாக்கண்டத்திலேயே மிகப்பெரிய குதிரை சிலை இதுதான் என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள கோவிலில் உறையும் இறைவன் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் என்று அழைக்கப்படுகிறார்.

அறநிலையத்துறையைச் சேர்ந்த இந்த ஆலயத்திற்கு திருவிழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நெடும் தொலைவில் இருந்தெல்லாம் வந்து செல்லுகிறார்கள்.

குதிரை மற்றும் யானை இவையெல்லாம் அய்யனாரின் வாகனங்களாக போற்றி வணங்கப்படுவது தமிழர் மரபு.

தகவல்: ஆசிரியர் அ.சண்முகம்-சித்துக்காடு

Thursday, June 19, 2008

ஒரு நாகசுரம் உருவாகிறது



நாகசுரம் ராஜவாத்தியம் எனப்படுகிறது.
ஆறுகால பூஜைகளிலும் இந்த நாகசுரம் வாசிக்கப்படுகிறது.
விடியற்காலத்தில் பூபாளமும்
காலையில் மலையமாருதமும்
உச்சிக்காலத்தில் சுருட்டி மத்யமாவதி ராகங்களும்
மாலைப்பொழுதில் கல்யாணி, பூர்வி கல்யாணியும்
முன் இரவிலும்
அர்த்த ஜாமத்திலும் நீலாம்பரியும்
கோவில்களில் இன்றளவும் வாசிக்கப்படுகின்றன.
தற்போது வாசிக்கப்படும் நாகசுரம் பாரி நாகசுரம் எனப்படும்.

இதனை வடிவமைத்து உருவாக்கிய பெருமை கும்பகோணம் அருகில் உள்ள
நரசிங்கம்பேட்டையைச்சேர்ந்த மறைந்த என். ரங்கநாத ஆசாரியாரையே சேரும்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டில் உத்திரங்களாக பயன்படுத்தப்பட்ட
நன்கு உலர்ந்த ஆச்சா மரத்தில் இருந்துதான் இந்த பாரி நாகசுரம் உருவாக்கப்படுகிறது.

நாகசுரம் சீவாளி கெண்டை, உலவு எனப்படும் நீண்ட பாகம், அணசு போன்ற பாகங்களைக்
கொண்டதாகும். சுமார் 2.5 அடி நீளம், 2 அங்குல அகலம் கொண்ட உருண்டை வடிவ உலவு
பகுதியை சிறிதும் பெரிதுமான-பெருக்களவு, அடுக்களவு, கொத்து- பல்வேறு கூரிய வாள்
போன்ற இரும்புக்கம்பிகளைக்கொண்டு கடைந்து பெரிய துவாரத்தை உருவாக்குகின்றனர்.
முதன்மை சுரங்களுக்காக நேர்கோட்டில் 7 துளைகளும், காற்றை வெளியேற்றுவதற்காக
அடிப்பகுதியில் பக்கத்திற்கு இருதுளைகள் வீதம் நான்கு துளைகளும், நடுப்பகுதியில் ஒரு
துளையுமாக மொத்தம் 12 துளைகள் இடப்பட்ட குழல் பகுதி உருவாக்கப்படுகிறது.
அடியில் புனல் வடிவில் அணைவுக்காக இணைக்கப்படும் அணசு, வாகை மரத்தில் தயாரிக்கப்
படுகிற்து.

ரெங்கநாத ஆசாரி தயாரித்து அளித்த பாரி நாகசுரத்தில் மட்டும்தான் சுத்தமத்தியமம் சுத்தமாக
பேசும் எனவும் அவரை அரசாங்கம் போற்றிப்பாதுகாக்கவேண்டும் என்றும் டி.என்.ராஜரத்தினம்
தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாகசுரக்கருவிகளை நரசிங்கம்பேட்டையில் உள்ள மறைந்த ரெங்கநாத ஆசாரியின் உறவினர்களான 5 குடும்பத்தினர் மட்டும்தான் செய்து வருகின்றனர்.
இருப்பினும் மத்திய மாநில அரசுகள் வழங்கும் கைவினைஞர்களுக்கான விருதுகள் இன்றளவும் இவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை என வேதனையுடன் தெரிவிக்கிறார் ரெங்கநாத ஆசாரியாரின் மகன் செல்வராஜ்.

-கலை விமரிசகர் தேனுகா-தினமணியில் எழுதிய கட்டுரையில் இருந்து...
தகவல்:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

தஞ்சாவூர் வீணை(THANJAVUR VEENA)

வீணை செய்யும் தொழில் தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெறுகிறது.
வீணை செய்வதற்கு முக்கியமான பலாமரத்தை மொத்தமாக பண்ருட்டியில் இருந்து
வாங்குகிறார்கள். ஒரு பெரிய பலா மரத்தில் இருந்து ஐந்து அல்லது ஆறு வீணைகள்
செய்யலாமாம். வீணையின் அளவு நாலேகால் அடி. வெளிக்கூடு அகலம் பதினாலரை
அங்குலம்.சராசரியாக 7 கிலோவிலிருந்து 9 கிலோவரையில் எடை இருக்கும்.

சரஸ்வதி வீணை, ஏகதண்டி வீணை என்ற இரண்டு வகையான வீணைகள் தஞ்சாவூரில்
செய்யப்படுகின்றன.வீணையின் குடத்தின்மேல் சிற்பங்களும் செதுக்குகிறார்கள்.

வீணைக்கு செயற்கையாக வண்ணம் தீட்டுவதில்லை. பலாமரம் பால்வகை மரம்.
நாளாக நாளாக அதுவே மெருகேரும். புதிய வீணையின் எடை மரம் காயும்போது
குறையத்தொடங்கும். அப்போது சுருதி சுத்தமாக இருக்கும். ஒரு வீணையை செய்து
முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும்.

வீணை தயாரிப்பில் நுட்பமான வேலை 'சுரஸ்தானம்' அமைப்பதுதான். இசை ஞானம்
உள்ளவர்களால்தான் இதை செய்ய முடியும்.

தஞ்சாவூரில் தயாராகும் வீணைகள் ஒவ்வொன்றும் 4,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய்
வரை விற்பனை செய்யப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வீணைகள்
8,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விலை போகிறது.

ஆதாரம்: தினமணி
cauverynagarwest@gmail.com

அச்சு வெல்லமே...அச்சு வெல்லமே...




தமிழ்நாட்டில் பழனி, புளிக்கல் பாளையம், தர்மபுரி, தாராபுரம், நெய்க்காரன் பட்டி இங்கெல்லாம்
வெல்லமும் சர்க்கரையும் தயாராகிறது. இருந்தாலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிப்படுகை
யில் உள்ள வீரமாங்குடி, தேவன்குடி, மாகாளிபுரம், உள்ளிக்கடை, பட்டுக்குடி, உப்பளப்பாடி, நக்கம்
பாடி போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் தயாரிக்கப்படும் வெல்லமும் சர்க்கரையும்
சிறப்பாக பேசப்படுகிறது. காவிரிப்படுகையின் மண்வாகு சிறப்பாக இருப்பதால் தஞ்சை பகுதி
யில் உற்பத்தியாகும் வெல்லத்திற்கும் சர்க்கரைக்கும் தனியான மதிப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுத்தங்கம் என்றால் அச்சு வெல்லத்தையும், சர்க்கரையையும்
குறிக்கும். வெள்ளைத்தங்கம் என்றால் சீனியைக்குறிக்கும்.
காவிரிப்படுகையில் விளைவிக்கப்படும் கரும்பிலிருந்து எந்திரங்கள்மூலம் சாறுபிழியப்படுகிறது.
பெரிய கொப்பரையில் ஆயிரக்கணக்கான லிட்டர் சாறு நிரப்பப்பட்டு, கரும்புச்சக்கைகளால்
எரியும் அடுப்பில் கொதிக்கவைக்கப்படுகிறது.
கரும்புச்சாற்றில் உள்ள அழுக்குகளை எடுக்க சோடா உப்பு, குருணை ஹைட்ரஸ் போன்றவற்றை
சிறிதளவு சேர்க்கிறார்கள். சாறுகொதித்து பாகாய் மாறும் தருணத்தில் அச்சுக்களில் ஊற்றினால்
அருமையான வெல்லம் தயார்.
பாகை ஆறவைத்து துடுப்பால் கிளறினால் சர்க்கரை தயார். மிதமான பதத்தில் உருண்டை
அச்சுக்களில் ஊற்றினால் உருண்டை வெல்லம் தயார்.

Monday, June 16, 2008

திருவையாற்றில் ஏழூர் பல்லக்கு-சப்தஸ்தானம் in THIRUVAIYARU












சப்தஸ்தானங்கள் என்று அழைக்கப் படுகிற ஏழு ஊர்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்ற ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார். அந்தத் தலத்தின் பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர் வலம் முடிந்து ஐயாறப்பர் திருவையாறு கோவிலின் திருவோலக்க மன்றத்தில் இருக்கும் மக்கள் "ஹர ஹர மஹாதேவா, சம்போ மஹா தேவா" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்கும். ஏழு ஊர்களிலும் செய்யும் கண்ணாடிச் சப்பரமும் அதன் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்கும்.

Monday, June 9, 2008

தஞ்சாவூர் மாலைகள்(THANJAVUR GARLANDS)



தஞ்சாவூர் மாலைகள்.
தஞ்சாவூர் மாலைகள் பெரும்பாலும் ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடியவை.
இதில் நெல்மாலை என்பது ஒரு வகை. இது ஒரு சுள்ளியின் துணையோடு கட்டப்படுவது.
நடுவே ஒரு சுள்ளியையும் இரு புறங்களிலும் நெல்மணிகளையும் பட்டுநூல்
கொண்டு இணைத்து முடியப்படுகிறது. தேவையான அளவில் அட்டையை வெட்டி
எடுத்து நெல்மணிகள் இணைக்கப்பட்ட சுள்ளிகளை அதில் வைத்து தைத்து
விடுகின்றனர். அதன்மேல் ஜரிகையைக்கொண்டு வேலைப்பாடுகள் செய்துவிடுகின்றனர்.
இந்த ஜரிகைகள் சூரத்தில் இருந்து தருவிக்கப்படுகின்றன.
இதனையடுத்து பல வண்ணங்களில் பதக்கங்கள் செய்து மாலைகளை இணைக்கப்
பயன்படுத்துகின்றனர். பதக்கங்களில் தங்கம்போல் ஜொலிக்கும் கயிறும்
அவற்றில் கோர்க்கப்படும் மணிகளும் மாலையை மேலும் அழகுபடுத்துவதுடன், நெல்மணிகள்
விழுந்துவிடாமல் காக்கும். இந்த வகையான மாலைகள் செய்வதற்கு குறைந்தது
ஐந்துகிலோ நெல் தேவைப்படுமாம்.

இன்னொரு வகையான மாலை லவங்க மாலை. இந்த மாலை செய்வதற்கு குறைந்தது 3 கிலோ
லவங்கமும் ஏலக்காயும் தேவைப்படுமாம். லவங்கத்துடன் ஏலக்காயை சேர்த்து
மல்லிகைமொட்டு போல் செய்யப்பட்டுப் பின்னர் மாலையாக கட்டப்படுகிறது.
திருநெல்வேலி மலைச்சரிவுகளில் லவங்கம் அதிகமாக கிடைப்பதால் கச்சாப்பொருள்
பிரச்சினை இல்லை.

மற்றொரு வகை மாலை ஜவ்வாது சந்தன மாலை. மனம் மயக்கும் வாசனையை
தனக்குள்ளே வைத்திருக்கும் சிறப்புக்குரியது இந்த மாலை. ஜவ்வாது கலவை
சிறிய துளைகளுடன் கூடிய மணிகளாக உருவாக்கப்படுகிறது. மணிகள் நன்கு
உலர்ந்ததும் பல வரிசைகளாகக் கட்டி ஜரிகைகளால் அலங்கரிக்கப்படுகிறது.
ஜவ்வாது மாலைகள் அரச குடும்பங்களின் சொத்தாகவே இருந்தன. தங்கள்
உடைகளை வாசனையாக வைத்திருக்க அரச குடும்பத்தினர் இந்த
ஜவ்வாது மாலைகளை பயன்படுத்தியிருக்கின்றனர்.
தஞ்சாவூர் மாலைகள் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விற்பனையாகிறது.
லவங்க மாலைகள் 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
பல நூறு ஆண்டுகளாக தஞ்சை அரச குடும்பத்தின் ஆதரவுடன் வளர்ந்த இந்தக் கலை
இப்போது நலிவடைந்து கொண்டே வருகிறது. பாரம்பரியமாக இந்த மாலையை
கட்டிவந்தவர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள்.

மாலைக்கே மாலை போடும் காலம்!

தகவல்:மு.குருமூர்த்தி

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஒரு அற்புத சிற்பம்

தஞ்சாவூர் பெரிய கோவிலின் முகமண்டபத்து வாயிலில் உள்ள துவார பாலகர் சிலை காட்டும் தத்துவம் அற்புதமானது.துவாரபாலகரின் காலடியில் கிடக்கும் பாம்பு ஒன்று யானையை விழுங்குவதாக சிலை வடிக்கப்பட்டுள்ளது. யானையை விழுங்கும் பாம்பின் உருவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பாம்பு சுற்றியிருக்கும் துவாரபாலகரின் கதாயுதத்தின் அளவை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

கதாயுதத்தை காலில் அழுத்திக்கொண்டிருக்கும் துவாரபாலகரின் உருவம் எவ்வளவு பெரியதாக இருத்தல் வேண்டும்?

அந்த துவாரபாலகரே "உள்ளே இருக்கும் ஈசனார் மிகப்பெரியவர்" என்று விஸ்மய முத்திரை காட்டுகிறார்.

தர்ஜனி முத்திரையால் நம்மை எச்சரிக்கை செய்கிறார்.

அபய முத்திரையால் ஈசன் கருணைமிக்கவர் என்று உணர்த்துகிறார்.

பரமசிவனாகத் திகழும் பரம்பொருளின் பேராற்றலை சிற்பவாயிலாக உணர்த்தும் வடிவ அமைப்புதான் தஞ்சாவூர் பெரிய கோயிலின் துவாரபாலகர் சிலைகள்.

ஆதாரம்:குடவாயில் பாலசுப்ரமணியனின் "தஞ்சாவூர்"
தகவல்: மு.குருமூர்த்தி

Sunday, May 18, 2008

தஞ்சாவூர் ஓவியங்கள்...THANJAVUR PAINTINGS...

தஞ்சாவூர், மதுரை நகரங்களை தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயகர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து ஓவியக் குடும்பங்கள் தமிழ் மண்ணில் வந்து வாழத்தொடங்கின. தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாக படைக்கப்பட்டன. தஞ்சாவூர்- திருச்சி பகுதியில் ‘ராஜு’ என்றும் மதுரையில் ‘நாயுடு’ என்றும் அவர்கள் அறியப் பட்டனர்.பொதுவாக பெரிய அளவில் இருக்கும் இந்த வகை ஓவியங்கள் வெகு நேர்த்தியான, செதுக்கல் வேலைப்பாடுகள் கொண்ட மரச் சட்டத்தின் நடுவில் அமைந்திருக்கும்.
சட்டமும் ஓவியத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படும். வரையப்படும் உருவங்கள் உருவ அளவில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். கடவுளின் உருவம் பெரிய அளவில் கித்தானின் பெரும்பகுதியை நிறைத்திருக்கும். மற்ற உருவங்கள் ஓவியத்தின் கீழ்ப் பகுதியில் வரிசையிலோ, அல்லது ஒழுங்குடன்கூடிய குழுவாகவோ அமைந்திருக்கும். உருவங்களும் உருண்டு திரண்ட பருமனான உடல்கொண்டபடியாகவே படைக்கப்படும். அவற்றில் பெண்மை சாயல் மேலோங்கியிருக்கும். முரட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு நளினம் கூடியதாக அவை காணப்படும்.
மைய உருவம் கரும் பச்சை, திட நீலம் அல்லது ஒளிர் சிவப்பு ஆகிய பின்புல வண்ணங்கொண்டு சமைக்கப்படும். நீலம், மஞ்சள், பச்சை அல்லது வெள்ளை நிறங்களில் மைய உருவங்கள் அமையும். வண்ணங்கள் திடமான கலவையாக தீட்டப்படும். உருவக்கோடுகள் வண்ணங்களுக்கான எல்லையை முடிவு செய்யும். உருவம் எப்போதும் ஒரு மாளிகையின் உட்புறத்தையோ, அல்லது கோயிலின் உள்சுற்றையோ பின்புலனாகக் கொண்டிருக்கும். பின்புலன் எவ்விதக் கட்டிட அமைப்பும் இல்லாது இருப்பினும் மேற்கவிகை, திரைசீலைகள் போன்றவை அதை உணர்த்தும் விதத்தில் இடம் பெற்றிருக்கும்.
திடமானதும் அழுத்தமானதுமான கோடுகள் ஓவியத்தைக் கட்டும்.தொடக்க காலத்தில் இவ்வோவியங்களில் வண்ணங்கள் அதிகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் வெளிறிய வண்ணக் கலவைகளுக்கும் இடம் இருந்தன.
பின்னர், அவை ஆடம்பரம் மிகுந்த, காண்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிக அளவில் தங்க வேலைப்பாடுகள் கொண்டதாகவும், அழுத்தம் கூடின ஒளிர் வண்ணங்களால் தீட்டப்பட்டதாகவும் மாறத் தொடங்கின. உருவங்களைச் சுற்றிய கோடுகளின் வெளிப்புறத்தில் வரிசையான புள்ளிகளும், மேல்பகுதியில் நெளிநெளியாகத் தொங்கும் சரிகை திரைச்சீலைகளும், செல்வச் செழிப்பை மிகைப்படுத்திக் காண்பித்தன. மலர்களும், மலர் மாலைகளும் இயற்கையிலிருந்து விலகி ஒரு அலங்காரம் கூடிய விதத்தில் அமைந்திருந்தன.தஞ்சாவூர் ஓவியங்களில் நாம் அதன் மேற்புறத்தில் பறக்கும் மனித உருவங்களைக் காணலாம். அவை மையத்தில் அமைந்திருக்கும் கடவுள் உருவத்தின் மேல் மலர் தூவியபடி அமைந்திருக்கும். இந்திய ஓவிய, சிற்பங்களில் பறக்கும் மனித உருவங்கள் என்பது புதியது அல்ல. ஆனால் இந்த உருவங்கள் தமது தோளின் பின்புறத்தில் முளைத்த இறக்கைகளை விரித்தபடி படைக்கப்பட்டிருக்கும். இந்த வடிவம் ஈரானிய, கிருஸ்துவ மரபுகளிலிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும். கிருஷ்ணரை குழந்தையாக உருவகப்படுத்தும் ஓவியங்களின் மேற்புறத்தில் காணப்படும் வடிவமைக்கப்பட்ட மேகக் கூட்டத்தின் பின்னாலிருந்து இவ்வித உருவங்கள் மேலெழும்பி பூக்கூடையிலிருந்து மலர்களை இறைப்பதைக் காணலாம்.பதப்படுத்தப்பட்ட பலா மரத்தின் பலகைகளை ஒருங்கிணைத்து, புளியங்கொட்டையை அரைத்துக் கிடைக்கும் பசைகொண்டு பலகையின் மேல் தடிமனான அட்டையை பிசிர் இன்றியும், காற்றுக்குமிழ் இல்லாதவாறும் ஒட்டுவார்கள்.
நன்கு காய்ந்த பலகையின் மீது இரண்டு அடுக்குகளாக துணியை ஒட்டிக் காயவைப்பதுடன் முதல்நிலை முடியும். பொடி செய்யப்பட்ட கல்லுடன் கிளிஞ்சலைப் பொடி செய்து கிடைக்கும் சுண்ணாம்பை நன்கு கலந்து, அதில் கோந்து சேர்த்து இளகிய பதத்தில் பிசைந்து, பலகையின் மேல் இரண்டு மூன்று முறை பூசுவார்கள். வழுவழுப்பான கல்கொண்டு பலகையின் பரப்பை நன்கு தேய்த்து தடையற்ற வழுவழுப்பான தளமாக ஆக்குவார்கள். படைக்கப்போகும் ஓவியம் திடமாக அதில் அமரத்தான் இத்தனை முன் ஏற்பாடுகள்.முன்பே தாளில் வரையப்பட்டிருக்கும் உருவங்களை கித்தான் பரப்பில் பொருத்தி, அதன்மேல் விளம்பிப் பதிவெடுப்பார்கள். அதில் அனைத்து வடிவங்களின் கோடுகளும் இடம்பெறும். பின்பு தூரிகைகொண்டு வடிவங்களை வண்ணத்தால் வரைந்துகொள்வார்கள்.கொதிக்கவைக்காத சுண்ணாம்புப் பொடியை பசையுடன் கலந்து பிசைந்து, கித்தான் பரப்பில் தேர்ந்தெடுத்த பகுதிகளில் சீராகப் பூசி சிறிதுபோல புடைக்கச் செய்வார்கள். வெட்டிய கண்ணாடித் துண்டுகள், விலை உயர்ந்த கற்கள் அந்தப் பரப்பில் பதிக்கப்படும். அவற்றைச் சுற்றி கலவையை திரும்பவும் பூசி திடப்படுத்துவார்கள். தங்கம் வெள்ளி தகடுகளையோ காகிதங்களையோ வெட்டி வடிவங்களாக்கி ஒட்டுவார்கள். அணிகலன்கள், ஆடைகள் போன்றவற்றில் இவை இடம் பெறும். இதன் பின்னர்தான் வண்ணம் தீட்டுவது தொடங்கும். வண்ணம் தீட்ட இயற்கை வண்ணங்களே பயன்பட்டன. ஓவியம் முடிந்தபின் அதற்கு பளபளப்பான பூச்சு கொடுத்து, சட்டம் கட்டுவார்கள்.

மிகையான ஒளிரும் வண்ணங்கள்கொண்டு இவை படைக்கப்பட்டதற்கு, இந்த ஓவியங்கள் பெரும்பாலும் ஒளி குறைந்த பூஜை அறைகளிலும், கோயில் மண்டபங்களிலும் பார்வையிலிருந்து விலகியும் இருந்ததைக் காரணமாகச் சொல்லலாம்.

தகவலும் படங்களும்:இணையத்திலிருந்து
தொகுப்பு:மு.குருமூர்த்திcauverynagarwest@gmail.com

Saturday, May 10, 2008

மன்சூர் தர்காவிற்கு இந்துக்களின் நன்கொடை...MANZUR DURGAH OF THANJAVUR

தஞ்சாவூரில் நாயக்கர்களின் ஆட்சி மலர்ந்த ஆண்டு 1535. பேரரசர் அச்சுத தேவராயர் அவருடைய மனைவியின் தங்கை மூர்த்தி மாம்பா எனும் மூர்த்தி அம்மாவின் கணவரான செல்வப்பநாயக்கரை சோழநாட்டின் ஆட்சியாளராக (மகாநாயன்காரர்) நியமித்தார்.

1535 லிருந்து 1564வரை செல்வப்ப நாயக்கர் தனியாகவும், பின்பு அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கருடன் இணைந்து 1590 வரையும் ஆட்சிசெய்தார்.
செல்வப்பநாயக்கரின் கல்வெட்டுத்தூண் தஞ்சை இரயில் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஷம்ஸ் மன்சூர் ஷாபீர் அவுலியா என்பாரது தர்க்காவில் முக்கிய நினைவுச்சின்னமாக அவுலியாவின் சமாதி அருகில் இன்றும் உள்ளது.

சாதாரண வருடம் மார்கழித் திங்கள் பதினான்காம் நாளாக சாசன நாள் குறிக்கப்பட்டுள்ளது. இது 1550 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமையைக் குறிப்பதாகும். தஞ்சை நகரில் திகழும் ஷம்ஸ்பீர் பள்ளி எனும் முகமதியர்களின் இந்த வழிபாட்டுத் தலத்தை நிருவகிக்கும் பக்கிரிகளிடம் நாஞ்சிக்கோட்டை மண்ணையர்களுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து ஏழுவேலி நிலத்தினைக் கொடையாகக் கொடுக்குமாறு செல்வப்ப நாயக்கர் உத்தரவிட்டார். அதன்படி

1. சிலம்பா மண்ணையார்
2 .வேல் மண்ணையார்
3. கோபால் மண்ணையார்
4. தம்பா மண்ணையார்
5 ........... மண்ணையார்


என்ற ஐந்து நாஞ்சிக்கோட்டை மண்ணையார்கள் ஏழுவேலி நிலத்தை ஷம்ஸ்பீர் பள்ளிக்கு அளித்தனர். இந்த ஏழுவேலி நிலத்திற்கும் நான்கெல்லையும் குறிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கல்வெட்டு செல்வப்ப நாயக்கரின் சமயப்பொறையையும் அக்காலத்தில் நிலவிவந்த இந்து முஸ்லிம் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுகிறது.

ஆதாரம்: குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய "தஞ்சாவூர்"

Friday, May 2, 2008

தீமிதி திருவிழா...FIRE WALKING FESTIVAL...IMAGES





தீமிதி திருவிழா தென்னிந்தியாவில் தோன்றியது. வழக்கமாக ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் விழா இது. மகாபாரதக்கதையின் திரெளபதி மாரியம்மனின் அவதாரமாக கருதப்படுகிறார். தீமிதி திருவிழாவிற்கு முன்பாக மகாபாரதக்கதை கூறப்படும். சில இடங்களில் நாடகமாக நடிக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தென்னிந்தியர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் தீமிதி திருவிழா கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஒருலட்சம் பக்தர்கள் தீ மிதித்தார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் தாமரங்கோட்டை கீழக்காடு அருள்மிகு தீக்குதித்த அம்பாளுக்கு நடைபெற்ற தீமிதி திருவிழாவின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Sunday, April 20, 2008

தாட்டு இலையில் தஞ்சாவூர் விருந்து...THANJAVUR FOOD SERVICE

தஞ்சாவூர் மாவட்டம் என்றாலே சுழித்தோடும் காவிரி, பச்சைப்பசேலென்ற பயிர்கள், தலையசைக்கும் நெல்வயல்கள், வானுயர்ந்த கோபுரங்கள், ரசனையான மனிதர்கள், சங்கீதம், பரதநாட்டியம், நாட்டுப்புறகலைகள், கும்பகோணம் டிகிரி காப்பி, தாட்டு இலை சாப்பாடு, வெற்றிலை சீவல்........இப்படி நினைவெல்லாம் விரிந்துகொண்டே போகும்....
அது என்னங்க...? தாட்டு இலை சாப்பாடு...! தஞ்சாவூர்க்காரர்களின் சாப்பாட்டு ரசனை சாப்பிடும் இலையிலிருந்தே தொடங்கிவிடுகிறது. நல்ல அகலமான நுனி இலையைத்தான் தாட்டு இலை எனக்குறிப்பிடுகிறார்கள். எப்போது எந்தெந்த வகையில் உணவு இருக்கவேண்டும், அதை எப்படி பக்குவமாக தயாரிக்கவேண்டும், எப்படி ரசனையோடு பரிமாறவேண்டும், எப்படி சாப்பிடவேண்டும் என்பதெல்லாம் தஞ்சாவூர்க்காரர்களின் இரத்தத்திலேயே ஊறிப்போன பெருமைமிக்க சம்பிரதாயங்கள். வீட்டு நிகழ்ச்சிகளில் சமையல், சாதாரண நாட்களில் சமையல் ஆகிய இரண்டிலுமே இத்துணை அம்சங்களையும் காணமுடியும்.

ஒரு சிறப்பு விருந்தில் எந்தெந்த உணவு வகைகள் இடம் பெறும்? எப்படி பரிமாற வேண்டும்?

பாயசம், தயிர்ப்பச்சடி, மாங்காய் அல்லது நார்த்தங்காய் இனிப்புப் பச்சடி, இரண்டு கோசுமறி, ஒரு காரக்கறி, ஒரு தேங்காய்போட்ட கறி, பருப்பு உசிலி, பூசணிக்காய் அல்லது கத்தரிக்காய் ரசவாங்கி, அவியல், வறுவல், பருப்பு, வடை, அப்பளம், ஸ்வீட், முக்கனி (வாழை, மா, பலா), இவையல்லாது இரண்டு வகையான கலந்த சாதம்.

இலையில் இடம்பெற வேண்டிய முறை:
இலையின் நுனிப்பகுதி சாப்பிடுபவரின் இடப்பக்கம் இருக்கும்படி இலைபோடப்படவேண்டும். பாயசம் வலப்பக்க ஓரமாக இலையின் கீழ்ப்பகுதியில் ஒரு ஸ்பூன் அளவு வைக்கப்படவேண்டும். மேலே கூறிய உணவு வகைகள் வரிசைப்படி இலையின் மேல்பகுதி வலப்பக்க ஓரத்திலிருந்து வரிசையாக வைக்கப்படவேண்டும். தயிர்ப்பச்சடி முதல் காய்கறிகளை வைத்திக்கொண்டே வந்தால் வடை வறுவல் முதலியவை நுனி இலைப்பகுதிக்கு வந்துவிடும். பருப்பு மட்டும் இலையில் எதிர்ப்பக்கத்தில் நடு நரம்பிற்குமேல் வலப்புறத்திலுருந்து சற்றே தள்ளி இடம் பெறும். இதற்குப்பிறகு இலையின் கீழ்ப்பகுதியில் நடுவில் சாதம் வைக்கப்பட்டு, நெய் ஊற்றப்பட்ட பிறகு பாயசத்தை முதலில் சாப்பிட சற்றே நேரம் கொடுத்து, சாம்பார் அல்லது பிட்ளை முடிந்ததும், மோர்க்குழம்பு, ரசத்திற்கு சாதம் கேட்டு ரசம், மீண்டும் அப்பளம்-பிசைந்த சாதங்களும், பாயசமும் ஒன்றன்பின் ஒன்றாக பரிமாறப்படவேண்டும். ஊறுகாய், சாதம், மோர் தேவைப்படுபவர்களுக்கு சாம்பார் (தொட்டுக்கொள்ள).

எல்லோரும் சாப்பிட்டு முடியும் நேரத்தில் 'சந்தேகத்திற்கு சாதம்' என்று கூறியவாறே சாதமும் மோரும் வலம் வரும். யாருக்காவது இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று தோன்றினால் சாப்பிட்டுக்கொள்ளலாம். இது கட்டாயமான தஞ்சாவூர் சம்பிரதாயம். இதைப்போல ரசத்திற்கு முன்னால் 'சந்தேகத்திற்கு சாம்பார்' வலம் வரும்.

திருமணத்தன்று மதியம் சாப்பாட்டு மெனுவும் இதுதான். பழைய சம்பிரதாயத்தில் கலந்த சாதங்கள், வடை கிடையாது. பாயசமும் பருப்புவெல்ல பாயசம்தான். ஸ்ரீவைஷ்ணவ வீடுகளில் புளியோதரை, அக்கார அடிசில், தயிர்வடை கட்டாயம் இடம் பெறும். ஸ்வீட், அவரவர்கள் வசதிக்கேற்ப உதிர்த்த பூந்தி, குஞ்சாலாடு, மைசூர்பாகு, பாதுஷா, ஜாங்கிரி- இவற்றில் ஒன்று போடப்படும். ஸ்வீட்களின் ராஜா தஞ்சாவூரைப்பொறுத்தவரை பதிர்பேணிதான். இதில் பதிர்பேணி, சேமியாபேணி என்று இரண்டுவகை உண்டு. பதிர்பேணி என்பது பெரிய வடிவிலான பூரி. சேமியா பேணி வடிவில் பெரிய இடியாப்பம். மைதாமாவினால் செய்யப்படும் இதன்மீதுபூரா சர்க்கரையையும் (அரைத்த ஜீனி) அதன்மீது பாலையும் ஊற்றி ஊற வைத்து சாப்பிடவேண்டும்.

நன்றி:தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Monday, April 14, 2008

தஞ்சை வட்டார வழக்கு THE DIALECT OF THANJAVUR

'திண்ணை வீரா' என்றொரு சிறுகதை.
தி.ஜானகிராமன் எழுதியது.
தன்னுடைய வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்தபடி ஊர்வழக்குகளைத்தீர்த்து வைக்கிறார் ஒரு பெரிய மனிதர்.
அந்த பெரிய மனிதருக்கும் கடனைத்திருப்பிக்கொடுக்காதவனுக்கும் நடக்கும் உரையாடலைப் படியுங்கள். தஞ்சை வட்டார வழக்கு உங்களுக்கு பிடித்துப்போகும்.

"எல என்ன கட்டை ரொம்பத் துளுத்துப்போச்சு? ம்ஹும், சீ......கையைக் கீளப்போடு.......ஏண்டல, கணக்குத்தீக்க அம்மாசிக்கே வரேன்னு சொன்னியால்லியாடா?.......ஏண்டா! சொன்னியால்லியாடா? சொன்னியால்லியாடா? ஏண்டா சும்மா நிக்கிறியே? ஏல, உன்னத்தாண்டா.......ஏன், பேசமாட்டியா? இப்ப....எழுந்து வந்தேனோ.....?"

"அம்மாசிக்குத்தான் என் மாமியா இளுத்துக்கிட்டு கிடந்துச்சுங்க. காலங்காட்டியும் கிளம்பிவரணும்னுதான் படுத்தேன். ரண்டு சாமத்துக்கு ஆள் வந்துருச்சு......முன்னெத்தி மயிரைப்புடிச்சாத்தெரியாதுங்க.....அப்படி இருட்டு கும்பிக்கிட்டு இருந்தது. அதிலேயே உளுந்தடிச்சிகிட்டுப் போனோம். விடிஞ்சு போய் சேர்ரதுக்குள்ளாக திருவாலூர் ஆசுபத்திரிக்குத் தூக்கிட்டுப்போயிட்டாங்களாம். அப்புறம் மேலே போயி.......அவதியாப்பூட்டுங்க....."

"சரி, அப்புறம்? மருமவன் கைராசிதான் மாமியா பொளச்சுகிட்டா. சரி. உடனே வர்றதுக்கென்னவாம்? அம்மாசி போயி பதினோரு நாளாச்சிடா?"

"போன இடத்திலே டாகுட்டருக்கும் மருந்துக்கும் நாப்பது ரூவாக்கு மேலே போயிடுச்சுங்க. அப்புறம் மேலே......."

"சரி. எடு பணத்தை!"

"அதாங்க சொல்ல வந்தேன்.....இந்த மருந்து செலவு ரொம்ப அடாபுடியாப் பூட்டுங்க.....!"

"அதுக்காக......?"

"இந்த மார்களி முச்சூம் பொறுத்துக்கிட்டா, பொங்கல் களிஞ்சு மூணா நா கொண்டாரெனா இல்லியா பார்த்துக்கங்க..."

"ஏல, இஞ்ச வா இப்படி வாடாங்கறேன். வாடா இப்படி வரமாட்டியா? இப்ப எழுந்துவந்தேனோ, தெரியுமா?"

பந்தல் காலடியில் நின்ற ஆசாமி திண்ணைப்பக்கம் போனான்.

"இஞ்ச வாடா இப்படி......இப்படி கிட்ட வாடா, வரமாட்டே! இப்ப எழுந்து வந்தன்னா பாத்துக்க...."

ஆசாமி அருகில் போனான்.

"போட்டுக்கடா......என்னடா பாக்கிறியே? கன்னத்திலே போட்டுக்கடாங்கிறேன்......பளார் பளார்னு நாலு போட்டுக்கணும். மாட்டியா? நான் தான் போடணுமா?"

ஆசாமி பளார் பளார் என்று கன்னத்தில் நாலு போட்டுக்கொண்டான்.

"போட்டுக்கிட்டியா?.....இதைக்கையில எடு......எடுத்துக்கிட்டியா? என்னிக்குப் பணம் கொண்டாரே?"

"தை மாசம் நாலாம் தேதி."

"நிச்சயமா?"

"நிச்சயமா."

"கிழக்கே பாத்துக்கிட்டு சொல்லுறே பாத்துக்க. கையிலே எடுத்துக்கிட்டு நிக்கிறியே .....அது என்ன தெரியுமாடா?

"பொய்த்தவம்."

"பொய்த்தவமில்லேடா, பொஸ்தகம்......சும்மா தங்கமத்தில்லால இல்லே. திருமுருகாற்றுப்படை. சுப்பிரமணியசாமி இருக்குறார் பாரு. அவர் மேலே பாடின பாட்டுங்க. அத கையிலே வச்சுக்கிட்டு கிழக்கைப்பாத்துக்கிட்டு, தைமாசம் நாலம் தேதி கொண்டாரேன்னு சொல்லியிருக்கே. ஜாக்ருதெ. பயலே, தேதி தப்பிச்சோ, கண்ணைப்பிடுங்கிப்புடுவாரு சுப்ரமணியரு! உஜாரா இரு.....தெரிஞ்சுதா? ஏய், செவுத்தியான்! கேட்டுக்கிட்டியா, தைமாசம் நாலாம் தேதின்னு சொல்றான்....சவநாது. நீயும் கேட்டுக்க!"

"கேட்டுதுங்க" என்று பந்தல் ஓரத்திலிருந்து இரண்டு ஆட்கள் சாட்சி சொன்னார்கள்.

நன்றி:தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Wednesday, April 9, 2008

செம்பியன் கண்டியூரில் ஒரு கற்கால ஆயுதம் கண்டுபிடிப்பு STONE AXE WITH INDUS VALLEY SCRIPT FOUND NEAR MAYILADUTHURAI

இந்துசமவெளி நாகரிக எழுத்துக்களுடன் கூடிய ஒரு புதிய கற்கால ஆயுதம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் என்ற கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வி.ஷண்முகநாதன் என்ற பள்ளி ஆசிரியர் தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் வாழைக்கன்று நடுவதற்கு குழி தோண்டியபோது இரண்டு கற்களாலான ஆயுதங்களைக்கண்டெடுத்தார். இந்த ஆயுதங்கள் கி.மு.1500 ஆம் ஆண்டைச்சேர்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓர் ஆயுதம் தஞ்சாவூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆயுதத்தின்மீது உள்ள நான்கு குறியீடுகள் உள்ளன. இக்கருவி கிடைத்த செம்பியன் கண்டியூரில் இரும்புக்காலத்தைச்சேர்ந்த தாழிகள், கருப்பு சிவப்பு மட்கலங்கள், குறியீடு பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள் மற்றும் எலும்புத்துண்டுகள், சாம்பல் நிற மட்கலங்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வூரிலிருந்து கிழக்கே 5 கி.மீ.தொலைவில் உள்ள வாணாதிராஜபுரம், வடக்கே 2 கி.மீ. தொலைவிலுள்ள முருகமங்கலம் ஆகிய ஊர்களிலும் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கிடைத்துள்ள கருவியில் நான்கு பொறிப்புகள் உள்ளன. முதற்பொறிப்பு குத்திட்டு அமர்ந்த நிலையில் உள்ள மனிதவடிவுடையதாகவும்(ஹரப்பா எழுத்துக்களின் அகர பட்டியலில் எண்.48), அடுத்த பொறிப்பு கோப்பை வடிவிலும்(எண்.342), மூன்றாவது பொறிப்பு ஏறத்தாழ முத்தலைச்சூலம் போன்ற அமைதியிலும்(எண்.368), நான்காவது பொறிப்பு குத்திட்ட பிறைவடிவின் நடுவில் ஒரு வளையத்தினை இணைத்தது போலவும்(எண்.301) உள்ளது. எழுத்துக்களில் முதலிரண்டும், கூரிய கருவியால் தொடர்ந்த புள்ளியிட்டும், அடுத்தவை கீறலாகவும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இடமிருந்து வலமாகவே பொறிக்கப்பட்டவை என்பதை இடப்புறமிருந்து வலப்புறமாக அழுத்தம் குறைவதிலிருந்தும், அளவில் பெரியதாகத் தொடங்கி வரவரச் சிறியதாக எழுதியிருப்பதில் இருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.

"இந்த நூற்றாண்டின் மிகமுக்கியமான அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு இது" என்று உலகப்புகழ்பெற்ற தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நிபுணர் திரு. ஐராவதம் மகாதேவன் இந்த இரண்டு கற்களைப்பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். இந்து சமவெளிநாகரிக எழுத்துக்கள் தமிழ்நாட்டையும் எட்டியிருந்தன என்பதுதான் நமக்குக்கிடைக்கும் புதிய செய்தி. "நான் மிக கவனமாக இந்த இரண்டு கற்களையும் ஆராய்ந்தேன். கி.மு. 1500க்கும் கி.மு.2000க்கும் இடைப்பட்ட காலத்தைச்சார்ந்ததாக இந்த கற்கள் இருக்கவேண்டும்" என்கிறார் திரு ஐராவதம் மகாதேவன். வட இந்தியாவில் இருந்து இந்த கற்கள் வந்திருக்கலாம் என்ற கூற்றை திரு ஐராவதம் மகாதேவன் உறுதியாக மறுத்தார். இந்த கற்கள் முழுக்கமுழுக்க தென்னிந்திய பாறைவகையைச்சேர்ந்தது என்றும் திரு ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

கற்களினாலான இரண்டு ஆயுதங்களில் ஒன்றில் மட்டும் எழுத்துக்குறியீடுகள் காணப்படுகின்றன. நான்கு குறியீடுகளில் முதலாவது குறியீட்டில் விலாஎலும்புகளுடன்கூடிய உடலமைப்பு காணப்படுகிறது. இரண்டாவது குறியீட்டில் ஒரு ஜாடி காணப்படுகிறது. இதைப்போன்ற நூற்றுக்கணக்கான அடையாளங்கள் ஹாரப்பாவில் காணப்படுகின்றன. திரு ஐராவதம் மகாதேவன் முதல் குறியீட்டை 'முருகு' எனவும் இரண்டாவது குறியீட்டை 'அன்' என்றும் இரண்டு குறியீடுகளும் சேர்ந்து 'முருகன்' என்ற சொல்லை உணர்த்துவதாக கூறுகிறார். பழந்தமிழ் செய்யுள்களில் முருகக்கடவுள் வேட்டையாடுபவராகவும், போர்க்கள கடவுளாகவும் சித்தரிக்கப்படுகிறார். மூன்றாவது குறியீடு சூலமாகவும் நான்காவது குறியீடு பிறையாகவும் காணப்படுகிறது.

சிறப்புகள்:
புதிய கற்காலக் கோடரி, சிந்து சமவெளி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை.
புதிய கற்காலப் பண்பாட்டுத்தமிழ் மக்களுக்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடையேயான தொடர்பினை வலியுறுத்தும் கண்டுபிடிப்பு.
சிந்துவெளிப்பண்பாட்டு நாகரிகக் கூறுகள் கோதாவரி ஆற்றுக்கும் தெற்கே பரவி இருந்ததற்கான உறுதியான சான்று.
தமிழகத்தில் சிந்துவெளிப்பண்பாட்டுப் பரவலுக்கான நேரடிச்சான்று
ஹரப்பன் எழுத்துக்களின் காலக்கணக்கீட்டுக்கு உதவும் நேரடிச்சான்று
வடக்கு தக்காணத்தில் நிலை பெற்றிருந்த் ஹரப்பா பண்பாட்டினரோடு தமிழர்கள் கொண்டிருந்த தொடர்புக்கான சான்று.
தமிழரின் எழுத்துத்தொன்மையினை உறுதிப்படுத்தும் மிகச்சிறந்த சான்று.

எந்த ஒரு கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்போ முன்வைக்கப்படும்வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம். தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞானபூர்வமான சான்றுகள் ஆகும்.தன்னிகரில்லாத நம் தமிழ்மொழி குறித்துப் பெருமை கொள்வோம்.
மேலும் படிக்க விரும்புவோருக்கு
http://www.tn.gov.in/misc/Archaeological_discovery.htm
http://kalyan96.googlepages.com/Sembiyankandiyurcelttool.pdf

தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Monday, April 7, 2008

தஞ்சை ராமையாதாஸ் THANJAI RAMAIYADOSS

தஞ்சையில் உள்ள மானம்பூச்சாவடி தான் சொந்த ஊர். அங்குள்ள செயிண்ட் பீட்டர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது முடித்தவர். தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் படித்து “புலவர்” பட்டம் பெற்றார். அத்துடன் ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முடித்தார். தஞ்சை ஆட்டுமந்தைத் தெருவில் உள்ள ஆரம்ப பாடசாலையில் ஆசிரியராக சேர்ந்தார்.
கவிஞரின் மகன் ரவீந்திரன் அப்பாவைப்பற்றி கூறுகிறார்.
அப்பா காங்கிரசில் இருந்தார். கட்சியில் ரொம்பவும் ஈடுபாடு. சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்சியின் கட்டளையை ஏற்று போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
சுதந்திரம் கிடைத்த பிறகு “சுதந்திர போராட்ட தியாகி” என்ற வகையில் கிடைத்த பட்டயம், பதக்கம் இரண்டையும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
சினிமாவுக்காக அப்பா சென்னை வர காரணமாக இருந்தவர் டி.ஆர்.மகாலிங்கம்தான். அப்பாவின் பாட்டெழுதும் திறமையை முதலில் கண்டு கொண்டது நாகிரெட்டியாரின் விஜயா - வாகினி நிறுவனமே. 1951 முதல் 1960 வரை அந்த நிறுவனம் தயாரித்த “பாதாள பைரவி”, “மிஸ்ஸியம்மா”, “மாயாபஜார்” போன்ற பல படங்களுக்கு வசனம், பாடல்கள் அப்பாதான். விஜயா - வாகினியின் ஆஸ்தான கவிஞர் என்ற தகுதியிலும் நிலைத்தார்.
அன்று இசையுலகில் கொடிகட்டிப் பறந்த இசை மேதைகள் சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கண்டசாலா, எஸ்.ராஜேஸ்வரராவ், ஆதிநாராயணராவ் ஆகியோரின் இசை அமைப்பில் அப்பா பாடல்கள் எழுதினார்.
சினிமா பாடலாசிரியர்களில் கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தனியிடம் உண்டு.
எம்.ஜி.ஆர். நடித்த குலேபகாவலி படத்திற்கு “மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வாவா” பாடலும் தருவார்.
மாயாபஜார் படத்துக்கு “கல்யாண சமையல் சாதம்” பாடலும் தருவார்.
காதலை நெஞ்சில் பதிக்கும் “மணாளனே மங்கையின் பாக்கியம்” படப்பாடலான “அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா”வும் தருவார்.
நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் “மலைக்கள்ளன்” படப்பாடலான “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடலும் தருவார்.
புரியாத மொழியில் `ஜிகினா’ வார்த்தைகளை கோர்க்கும் இன்றைய கவிஞர்களுக்கும் இவர் அன்றே முன்னோடியாக இருந்திருக்கிறார். அமரதீபம் படத்தில் “ஜாலியோ ஜிம்கானா” பாடலை எழுதியதும் இவரே.
கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த “புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே” பாடலை போடுவார்கள். “பானை பிடித்தவள் பாக்கியசாலி” படத்துக்காக இந்தப்பாடலை எழுதியதும் இவர்தான்.
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடலில் அப்பா சொன்ன கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அப்பா அரசியலிலும் இருந்ததால், மாற்றுக் கட்சியினரை வசைபாடவே இந்த பாடலை எழுதினார் என்றும் சொல்லப்பட்டது. அதனால் அரசியல்வாதிகளுக்கும் புத்தி சொல்கிற மாதிரி “ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க” என்று எழுதினார். தூக்குத்தூக்கி படத்தில் அவர் எழுதிய “ஆனந்தக்கோனாரே” பாடலும் சர்ச்சைக்குள்ளானது.
இப்படி காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நின்று கொண்டிருப்பவர் தஞ்சை ராமையாதாஸ்.
ஒரு சமயம் டைரக்டர் ஸ்ரீதர் “அமரதீபம்” படத்துக்கு பாட்டெழுதி வாங்க அப்பாவிடம் வந்திருக்கிறார். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் விவரித்ததும் அப்பா, “நம்பினா நம்புங்க! நம்பாகாட்டி போங்க” என்ற பல்லவியை சொன்னார். பதறிப்போன ஸ்ரீதர், “வாத்தியாரய்யா! இது எனது முதல் படம். அதோட படத்துக்கு நான் பதிவு பண்ணப்போற முதல் பாட்டும் இதுதான். இப்படி பாட்டு கிடைச்சா, படத்தை யாரும் வாங்காமல் போய்விடுவார்களே” என்று கலக்கமாய் கூறியவர், “வேற ஒரு பாட்டு ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக்கொடுங்க” என்று கேட்டிருக்கிறார்.
அப்பாவும் உடனே தமாஷாக, “ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா” என்று எழுதிக் கொடுத்திருக்கிறார்.
“இதுக்கு என்ன அர்த்தம்?” என்று ஸ்ரீதர் முழிக்க, அப்பாவோ, “கதைப்படி இது குறவன் - குறத்தி பாடற பாட்டு. குறவர்கள் பாஷை எனக்கும் தெரியாது. உனக்கும் தெரியாது. போய் தைரியமாய் ரிக்கார்டிங் செய். படம் அமோகமாக வெற்றி பெறும்” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். படம் வெற்றி பெற்றதோடு அப்பாவுக்கு “டப்பாங்குத்து பாடலாசிரியர்” என்ற பெயரும் வந்து சேர்ந்தது. ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது பாணியில் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார்.
அந்தக் காலத்தில் `கதை, வசனம், பாடல்கள் ஒருவரே’ என்ற நிலையை துவக்கி வைத்த முதல் கவிஞர் அப்பாதான். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் `பபூன்’ வேடமிட்ட சங்கரய்யரை கடைசி வரை ஆதரித்தார்.
பின்னாளில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் சமாதிக்கு சென்று குருபூஜை நடத்தி, தன்னை சங்கரதாஸ் சுவாமிகளின் `ஏகலைவன்’ என்றும் அழைத்துக் கொண்டார்”
தமிழில் மிக அதிகப்படங்களுக்கு (சுமார் 500) வசனம் எழுதிய ஆரூர்தாசுக்கு, தஞ்சை ராமையாதாஸ்தான் ஆசான்.
இதுபற்றி ஆரூர்தாஸ் கூறுகையில், “நான் 1953-ல் திரை உலகில் அடியெடுத்து வைத்தேன். `நாட்டியதாரா’ என்ற படத்துக்கு தஞ்சை ராமையாதாசுக்கு உதவியாளராகப் பணிபுரிந்தேன். எனக்கு மாதம் 50 ரூபாய் சம்பளம் கொடுத்தார். ஜேசுதாஸ் என்ற என் பெயரை ஆரூர்தாஸ் என்று மாற்றியவர் அவரே. வசனம் எழுதுவதற்கான வழிமுறைகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார். இந்த அளவுக்கு நான் சாதனை புரிவதற்கு அடிப்படை அமைத்தவர் அவரே” என்று நன்றி பெருக்குடன் குறிப்பிட்டார்.
திருக்குறள்
சினிமாவுக்கு பாட்டு, வசனம், தயாரிப்பு என்று பிஸியாகவே இருந்த நேரத்திலும், “திருக்குறள் இசையமுதம்” என்ற புத்தகத்தை எழுதினார், தஞ்சை ராமையாதாஸ். திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தில் இருந்தும் ஒரு திருக்குறளை எடுத்து, அதை பல்லவியாக்கி அந்தந்த அதிகாரத்தின் முழுக்கருத்தையும் எதிரொலிக்கிற பாடல்களை எழுதினார். பாடல்களுக்கான இசையை, ராகத்துடன் புத்தகமாக வெளியிடவும் செய்தார்.
1962-ம் ஆண்டில் இந்த குறள் காவியம் புத்தகமாக வெளிவந்தபோது, தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். அதில், “இசை கற்கும் ஒவ்வொருவரும் இந்தப் பாடல்களை கற்று சுரம் உணர்ந்து பாடி கலை இன்பம் பெறவேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இசை நூலை நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். மூலம் வெளியிட்டார். கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் “திருக்குறள் இசையமுதம்” எழுதியபோது அவரது உணர்வுகள் எத்தகையதாக இருந்தது? அதுபற்றி மகன் ரவீந்திரன் கூறுகிறார்:-
“நாங்களெல்லாம் படங்களுக்கு பக்கம் பக்கமாக பாட்டெழுதுகிறோம். இரண்டே அடியில் ஒரு குறளை எழுதி, அதற்கு இரண்டு பக்க விளக்கவுரை சொல்லும் அளவுக்கு மக்களிடம் பதிந்து போனவர் திருவள்ளுவர். என் வாழ்நாளில் நான் செய்த கலைச் சேவைகளில் மிகப்பெரியதாக இந்தப் படைப்பை உணருகிறேன்” என்று அப்பா சொன்னார்.
திருவள்ளுவர் பற்றி எழுதி முடித்த பிறகு மூன்றாண்டுகள் வரையே இருந்தார். அப்பா மறைந்தது கூட 1965-ல் ஜனவரி 16-ந்தேதி திருவள்ளுவர் தினத்தில்தான்.
45 வருடங்களுக்கு முன்பே அப்பா தந்த திருக்குறள் இசையமுதம் புத்தகத்தைப் படித்த சில கவிஞர்கள், “இதை இசைக் கல்லூரியில் பாடமாக வைக்கலாம்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார்கள்.
இவ்வாறு ரவீந்திரன் கூறினார்.
தஞ்சை ராமையாதாசின் மகள் ஆர்.விஜயராணி தனது தந்தை பற்றி கூறியதாவது:-
சினிமாவில் பாட்டெழுதி வந்தாலும், காங்கிரஸ் தலைவர்களின் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. பெருந்தலைவர் காமராஜர், கக்கன் போன்ற காங்கிரஸ் தலைவர்களிடம் அப்பாவுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. கலைஞர் மு.கருணாநிதி தனது வசனங்கள் மூலம் சினிமாவில் பிரபலமான நேரத்தில் அப்பாவுக்கும் நெருங்கிய நண்பராகி இருக்கிறார். 1965-ல் அப்பா காலமாகும்வரை அந்த நட்பு நீடித்தே வந்தது. லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடனும் அப்பாவுக்கு நல்ல நட்பு தொடர்ந்தது.
கருத்தாழ பாடல்கள் மட்டுமின்றி தமாஷான பாடல்கள் எழுதுவதிலும் அப்பா திறமையானவர். “சிங்காரி”யில் “ஒரு சாண் வயிறு இல்லாட்டா உலகத்தில் ஏது கலாட்டா” என்கிற பாட்டை எழுதினது அப்பாதான்.
“மதுரை வீரன்” படத்தில் அப்பா எழுதின “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” பாடல், அவருக்கு ரொம்பவும் புகழைத் தேடித்தந்தது.
ஏற்கனவே நாடகத்துக்கு கதை எழுதியிருந்ததால், சினிமாவிலும் கதை முடிவாகும்போது அப்பாவிடம் கலந்து பேசுவார்கள். அப்பாவிடம் பாடல் எழுதும் திறமை மட்டுமின்றி, கதை ஞானமும் இருப்பதை தெரிந்து கொண்ட டைரக்டர் ராமண்ணா, “எம்.ஜி.ஆருக்காக ஒரு கதை தரமுடியுமா?” என்று கேட்டார்.
அப்பாவும் அப்போதே ஒரு கதை சொன்னார். அந்தக்கதை பிடித்துப்போக ராமண்ணா அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல அவரும் இதையே படமாக்குவோம் என்றார். இப்படி எம்.ஜி.ஆரையும் கவர்ந்த அந்தக்கதைதான் `குலேபகாவலி’ என்ற பெயரில் வெளிவந்தது.
இந்தப் படத்துக்கு அப்பா முதலில் எழுதிய பாடல், “சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு.” இந்தப்பாடல் எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பிடித்து, இதற்கு சிறப்பாக நடனக்காட்சி அமைக்க வேண்டும் என்று ராமண்ணாவிடம் சொல்லியிருக்கிறார்.
இதே படத்துக்கு அப்பா எழுதி காலத்துக்கும் மறக்க முடியாத காதல் பாடலாகிவிட்ட பாடல், “மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ” பாடல். அப்பாவின் பாட்டெழுதும் வேகம் பார்த்த எம்.ஜி.ஆர். அப்பாவை “எக்ஸ்பிரஸ் கவிஞர்” என்று பெருமையுடன் அழைப்பாராம்.
இப்படி அப்பாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆருடனேயே ஒரு கட்டத்தில் அப்பா மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.”
கொள்கை விஷயத்தில் அப்பா நெஞ்சுறுதி மிக்கவர். எதற்காகவும், யாருக்காகவும் வளைந்து போகாதவர். `லலிதாங்கி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த அப்பா, எம்.ஜி.ஆரை கதாநாயகனாக போட்டார். பானுமதியையும் ஒப்பந்தம் செய்தார். படம் 10 ஆயிரம் அடிவரை வளர்ந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு பிரச்சினை எழுந்தது.
கதைப்படி எம்.ஜி.ஆருக்கு பக்தியுடன் கூடிய இளைஞர் வேடம். எனவே படத்தின் ஒரு பாடல் காட்சியில் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து வரவேண்டும்.
இந்த காட்சிக்காக ஒரு பாடலையும் அப்பா எழுதினார்:
“ஆண்டவனே இல்லையே
தில்லை தாண்டவனே உன்போல
ஆண்டவனே இல்லையே”
- இதுதான் பாட்டு.
இந்த பாடல், அப்போது தி.மு.க. வில் இருந்த எம்.ஜி.ஆருக்கு உடன்பாடாக இல்லை. தான் சார்ந்த கட்சியின் `கடவுள் மறுப்புக் கொள்கை’க்கு முரணானது என்று கருதினார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
அப்போதே எம்.ஜி.ஆர். பட உலகில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். எனவே, “எம்.ஜி.ஆரை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போங்கள்” என்று கலை நண்பர்கள் பலரும் அப்பாவை கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் அப்பா அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அதுவரை எடுத்த 10 ஆயிரம் அடி பிலிமையும் தூக்கிப்போட்டு விட்டு, அதே கதையை “ராணி லலிதாங்கி” என்ற பெயரில் சிவாஜி - பானுமதியை வைத்து எடுத்து முடித்தார். இந்தப்படத்தில்தான் அதுவரை `பிரமிளா’வாக இருந்த நடிகை “தேவிகா” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.
தான் நடித்து வந்த படத்தை பாதியில் விட்டு, சிவாஜியை வைத்து எடுத்தது எம்.ஜி.ஆருக்கு கோபம் ஏற்படுத்தவே செய்தது. உடனே தனது வக்கீல் மூலம் அப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அப்பா பதிலுக்கு தனது வக்கீல் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதில், “நான் “லலிதாங்கி” என்று எம்.ஜி.ஆரை வைத்து எடுத்தது வேறு படம். இப்போது சிவாஜியை வைத்து எடுப்பது வேறு படம். இதற்குப் பெயர் “ராணி லலிதாங்கி” என்று கூறியிருந்தார்.
அப்பா இப்படி செய்த பிறகும்கூட எம்.ஜி.ஆர். அவரிடம் கோபித்துக்கொள்ளவில்லை. “நமக்குள் நடந்தது கொள்கை ரீதியிலான மோதல். அவரவர் கொள்கையில் உறுதியாக இருக்கும்போது இதுமாதிரியான நிகழ்வுகள் சகஜம்” என்று பெருந்தன்மையாக கூறியதோடு, தொடர்ந்து தனது படங்களில் அப்பாவுக்கு பாட்டெழுதவும் வாய்ப்பு அளித்தார்.”
சினிமாவில் அப்பா தயாரிப்பாளரானதுதான் அவர் செய்த தவறு. “ஆளைக் கண்டு மயங்காதே” படம் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. பாட்டெழுதி சம்பாதித்து வடபழனி பேசும்படம் அலுவலகம் அருகில் பெரிய பங்களாவை வாங்கினார். தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தில் அந்த பங்களாவை விற்றுவிட்டார்.”
இவ்வாறு விஜயராணி கூறினார்.
கவிஞர் தஞ்சை ராமையாதாசுக்கு தாயாரம்மாள், ரங்கநாயகி என 2 மனைவிகள். வாரிசுகளும் ரவீந்திரன், விஜயராணி என இருவரே. ரவீந்திரன் பிரசாத் லேபில் சினிமா எடிட்டராக பணியாற்றுகிறார்.
விஜயராணி குடும்பத்தலைவி. கணவர் நடராஜன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு விஸ்வராஜ் என்று ஒரே வாரிசு விஸ்வராஜ், என்ஜினீயரிங் படித்தவர்.
நன்றி:Tamil News
தொகுப்பு:மு.குருமூர்த்தி
cauverynagarwest@gmail.com

Sunday, April 6, 2008

கும்பகோணம் வெற்றிலை KUMBAKONAM BETAL LEAF

தஞ்சாவூர்க்காரர்கள் வெற்றிலைப்பிரியர்கள். சரியாகச்சொல்வதானால் வெற்றிலை வெறியர்கள். அவர்கள் வெற்றிலை போடும் அழகே தனி. வெற்றிலையை வலிக்காமல் எடுப்பதும், அதற்கு வலிக்காமல் முதுகைத் தடவிக்கொடுப்பதும், சுண்ணாம்பை நடுவிரல் நுனியால் ஓவியம் வரைவதுபோல் தீட்டுவதும், மெதுவாக மடக்குவதும், பாக்கை வாசனை பார்ப்பதுவும்,......போதும்.........இதெல்லாம் எதற்காக தெரியுமா?........அடுத்து செய்யப்போகும் காரியத்தை அலசி ஆராய்வதற்காகத்தான்....

வெற்றிலைக்கும் நமக்கும் தொடர்பு அதிகம். கல்யாணம் தொடங்கி காட்டுக்குப் போகும்வரை வெற்றிலை நம்முடன் கூடவே வரும். தமிழ்நாட்டில் கும்பகோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது. இத்தனை ஊர்கள் இருக்கும்போது வெற்றிலைக்கு கும்பகோணத்தின் மேல் மட்டும் காதல்!
வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். கும்பகோணத்திற்கு வந்த முதல் காம்பு எந்த ஊரிலிருந்து வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராவது நிச்சயம்.

கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள். இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களுக்கெல்லாம் கற்பனை ஊற்று சுரக்க வெற்றிலையும் ஒரு காரணமாம். விஞ்ஞானத்துக்கும் எட்டாத காரணம் என்று வியப்பாக இருக்கிறதல்லவா!

வெற்றிலைபோடும் ரசனையை வெற்றிலையின் ரசிகர்களால் தான் நன்றாக வெளிப்படுத்தமுடியும். தஞ்சாவூர் தந்த எழுத்தாளர் ஜானகிராமன் எழுதிய 'வேதாந்தியும் உப்பிலியும்' என்றொரு சிறுகதை. வெற்றிலை போடுபவருக்கும், வெற்றிலை வாங்குபவருக்கும் நடக்கும் உரையாடலைப் படியுங்கள். நீங்களும் வெற்றிலையின் ரசிகராகிப் போவீர்கள்!

"நேத்து ஒரு கவுளி கொடுத்தே......அதென்ன வெத்தலையா கறிவேப்பிலையா? எல்லாம் துக்கினியூண்டு, துக்கிணியூண்டு.....! சுண்ணாம்புக்கலயத்தை கழுத்தில் கட்டிக்கவேண்டியிருந்தது. போதும் போதாத்துக்கு ஒரு மருமான் வந்து சேர்ந்தான் மாயவரத்துலேர்ந்து! ஒரு மணிக்கு கால் கவுளின்னு
அரைத்துத்தீர்த்துப்பிட்டான்!"

"மாயவரத்து ஆளுங்களுக்கு காப்பி கொடிக்கால் வெத்தல போட்டுப்பழக்கம். நர...நரன்னு மாடு கடிக்கிறாப்புல கடிக்கணும். துருப்பிடிச்ச டின்னுகணக்கா......கருப்பா....மொத்தமா இருக்கும். இந்தமாதிரி குஞ்சுங்களெ எங்க கண்டிருப்பாங்க! இத வாயிலெ போட்டா புள்ளியார்பட்டி வெள்ளரிப்பிஞ்சு. இதுக்கு பல்லா வேணும்? பொக்க வாயெ ஒரு தடவெ அப்படி லேசா அசைச்சிட்டாலே அப்படியே அரைஞ்சு அமிர்தம் ஊறுமே......."

"அது சரிய்யா....குஞ்சு, குஞ்சுன்னு சுண்ணாம்புக்கலயத்தையேவா கழுத்துல கட்டிக்கவிடறது.....? நீயே பாரு. தோ....இந்த உள்ளங்கையிலே மூணு வெத்தலை வெச்சுண்டுட்டேன். இந்த வெத்தலைய பரமக்குடிக்காரன் மாதிரி நிறையிலே வாங்கினாத்தான் கட்டும். இப்படி எண்ணி எண்ணி வாங்கினா நூறு வெத்தல நாலு தடவைக்குத்தான் வரும்!"
நன்றி: தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

Saturday, April 5, 2008

ஆரூர் ஆழித்தேர் THIRUVARUR TEMPLE CAR

திருவாரூர் பெரியகோயில் பிரமாண்டங்களுக்கு பெயர் போனது. சைவசமய மரபில் பெரியகோயில் என்றால் திருவாரூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலையே குறிக்கும். கோயிலின் பரப்பளவு 5 வேலி. கமலாலயம் என்றழைக்கப்படும் குளம் 5 வேலி.செங்கழுநீர் ஓடை 5 வேலி. கோயிலுக்கு சொந்தமான ஆழித்தேரின் எடை 220 டன்.
பிரமாண்டங்களையும் பிரமிக்கச்செய்யும் ஆழித்தேர் உலகில் உள்ள மற்ற தேர்களிலிருந்து வித்தியாசமானது. விஸ்வரூபமானது.

தொன்மை, கலைநயம், வடிவமைப்பு, பிரமாண்டம் ஆகியவற்றால் தஞ்சாவூரின் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களைப் பதித்துள்ள ஆழித்தேரின் சிறப்புகள் அளப்பரியது.
வியத்தகு ஆழித்தேரைக்கொண்ட அருள்மிகு தியாகராஜசுவாமிக்கு 'ஆழித்தேர் வித்தகர்' என்ற பெயரும் உண்டு.

பெரும்பாலான தேர்களின் விமானங்கள் அறுபட்டை, எண்பட்டைகளைக் கொண்டதாக இருக்கும். அல்லது வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆழித்தேர், பீடம் முதல் விமானம் வரை நான்கு பக்கங்களும் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஐந்து பட்டைகளும் கொண்டிருக்கும்.
அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி. விமானம் வரை தேர்ச்சீலைகள் அலங்கரிக்கப்படும் பகுதியின் உயரம் 48 அடி. விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி. மொத்த உயரம் 96 அடி

அலங்காரப்பொருட்கள்:
பெரிய குதிரைகள்-4, ரிஷபம்-8, யாளம்-1. பாம்புயாளம்-2, பிரம்மா-1 துவாரபாலகர்-2, கமாய் கால்-2, மேல்கிராதி-4, கீழ்கிராதி-2, பெரியகத்தி,கேடயம்-2, பூக்குடம்-16, ராஜா, ராணி-2, முதியவர்-மூதாட்டி-2, சுருட்டி-4, இலை-8, பின்பக்க கமாய் கால்-6, அம்பாரத்தோணி-2 உள்பட சுமார் 5 டன் எடையுள்ள 68 அலங்காரப்பொருட்கள் ஆழித்தேரில் பொருத்தப்பட்டு அழகுக்கு அழகூட்டப்படுகிறது.
இவற்றைத்தவிர கட்டுமானப்பொருட்களாக பயன்படும் 5 டன் பனஞ்சப்பைகள், 500 கிலோ துணிகள், 50 டன் எடையுள்ள கயிறு ஆகியவையும் அடக்கம்.
தேரை எளிதாக இயக்கவும், திருப்பவும் 1971 ஆம் ஆண்டு திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் மூலம் இரும்புச்சக்கரங்களும், ஹைட்ராக்லிக் பிரேக்கும் பொருத்தப்பட்டன.
ஆழித்தேரின் வடம்கூட தேரின் சிறப்பைக்கூறும். தேரில் பொருத்தப்படும் வடத்தின் சுற்றளவு 21 அங்குலம். 425 அடி நீளம் கொண்ட நான்கு வடங்களை இணைத்து பக்தர்கள் இழுக்க அசைந்தாடும் ஆழித்தேரோட்டத்தைக்காணக் கண் கோடி வேண்டும்.
பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையிலிருந்த ஆழித்தேரை சீரமைத்து மீண்டும் இயக்கியதன் மூலம் ஆழித்தேரின் வரலாற்றுப்பக்கங்களில் படிய இருந்த தூசைத் தட்டிய பெருமை திராவிட முன்னேற்றக்கழக அரசைச் சாரும்.
பக்தர்கள் மட்டுமல்லாது, அயலநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வியந்து போற்றும் ஆழித்தேரால் மாவட்டத்திற்கு மட்டுமல்ல.....தமிழ்நாட்டிற்கே பெருமை.

நன்றி:தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி. cauverynagarwest@gmail.com

Wednesday, April 2, 2008

தடம் பதிக்கவேண்டும்...தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள்........THAAITHAMIZH NURSERY AND PRIMARY SCHOOLS

தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தின் புதிய வரவல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயக்கமாக விரிவடைந்து வேரூன்றத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 63 தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவை காலத்தின் கட்டாயம்.
இவை எண்ணிக்கையில் குறைவானவை. எளிமையானவை; மேலும் உண்மையான தமிழுணர்வில் முகிழ்த்து எழுந்தமையால் வலிமையானவை. இவை ஆல்போல் தழைக்கும் காலம் தொலைவில் இல்லை. தமிழ் நாட்டில் அரசின் நேரடி நிர்வாகத்திலும், தனியாரின் மறைமுக நிர்வாகத்திலும் பட்டிதொட்டியெங்கும் தமிழ் வழியில் கற்பிக்கும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. போதாக்குறைக்கு ஆங்கிலவழியில் கற்பிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் ஒத்த எண்ணிக்கையில் வளர்ந்துள்ளன. மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் வளர்ச்சியை ஊடகங்கள் புற்றீசல்களுக்கு ஒப்பிட்டாலும் ஊடகங்களின் சொந்தக்காரர்களே மெட்ரிக் பள்ளிகளை ஆதரிப்பது நாமெல்லாம் அறிந்த ஒன்று.

தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகளுக்கு அவசியம் என்ன?

அருகாமையில் உள்ள அரசுப்பள்ளிகள் முழுஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியை செய்யாதபோது ஏழை எளியமக்கள் தொலைதூர பள்ளிகளுக்கு தம்முடைய குழந்தைகளை அனுப்ப இயலாது போகிறது. குறைந்த செலவில் தங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வியுடன் பண்பாட்டை சொல்லித்தரக்கூடிய ஒரு மாற்று ஏற்பாடு ஏழை மக்களுக்கு தேவைப்படுகிறது. அந்தந்தப்பகுதியில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் துவங்கி நடத்தும் பள்ளிகளே தாய்த்தமிழ் பள்ளிகள்.

மரங்களைப் பிடுங்கி நடுவதல்ல நம் பணி
விதைகளைப் பதிந்து வளர்ப்பதே நம் பணி

என்ற முழக்கத்துடன் தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே இப்பள்ளிகளை நடத்திவருகின்றனர்.
தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகளின் நோக்கம் மாசு மருவற்றது. அரசின் பாடநூல்கள்தான் இங்கும் கற்பிக்கப்படுகின்றன. அரசின் தேர்வுமுறையும் அரசு விதிக்கும் தேர்ச்சிவிதிகளும் இங்கு பின்பற்றப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயக்கமாக செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளின் வழிவந்த மாணவர்கள் தற்போது ஒன்பதாம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சி பெற்றுவருகிறார்கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மெட்ரிக்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் அளிக்கும் ஆதரவின் அடிப்படையே ஆங்கிலமொழியில் தம்முடைய பிள்ளைகள் பேச வேண்டும் என்ற ஆவல்தான்.
ஆங்கிலம் படித்தல் வேறு........ஆங்கில வழியில் பிறபாடங்களை படித்தல் வேறு.......என்பதை உணராமற்போவதன் விளைவு இது.
தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழியாக கற்பிக்கப்படுகிறது. மற்ற பாடங்கள் தமிழ்வழியில் கற்பிக்கப்படுவதால் மாணவர்களின் சிந்தனைத்திறன் மேம்படுகிறது. மாணவர்கள் ஆங்கில அறிவிலும், பாட அறிவிலும் ஒருசேர முதன்மைபெறுகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, நாச்சியார்கோவில், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் இயங்கிவருகின்றன. அனைத்துப்பள்ளிகளும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை பின்பற்றிவருகின்றன.

மற்ற பள்ளிகளிலிருந்து இவை எவ்வாறு வேறுபடுகின்றன?

மாணவர்கள் அரும்பு, மொட்டு, மலர் என்று வயதுவாரியாக பிரித்தறியப்படுகின்றனர்.
கையுறை, காலுறை, கழுத்துப்பட்டை இல்லாத எளிமையான எடுப்பான சீருடை.
தலைமை ஆசிரியரையும் ஆசிரிய ஆசிரியைகளையும் அத்தை, மாமா, அக்காள், அண்ணன் என்ற உறவு முறையில் அழைக்கின்றனர்.
மாணவர்களை வாடா, போடா என்று அழைக்கும் கொடுமை இல்லை.
மாணவர்களை அடிக்கும் வன்முறை இல்லை.
"சுந்தரம் நீங்கள் சொல்லுங்கள்"............."கார்த்திகா இங்கே பாருங்கள்" என்று ஆசிரியர்கள் மாணவர்களை அழைக்கின்றனர்.
மாணவர்கள் சந்திக்கும்போது கைகூப்பி "வணக்கம் வெற்றி உறுதி" என்றும், மாணவர்கள் பிரிந்து செல்லும்போது கட்டைவிரலை உயர்த்தி "நன்றி மீண்டும் சந்திப்போம்" என்றும் இயல்பாக கூறும்போது நம்முடைய நெஞ்சு நிமிர்ந்துகொள்கிறது.
பாடத்துடன் இயல்பான முறையில் விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.
திங்கள், புதன், வெள்ளி ஆகியநாட்களில் யோகாசனம் கற்பிக்கப்படுகிறது.
செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் ஆங்கில பேச்சுப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
உரிய வயதிற்குப்பிறகே எழுத்துப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு புத்தகமூட்டையை சுமக்கும் பயிற்சி இங்கு தரப்படுவதில்லை.
பெற்றோருடன் இப்பள்ளிகள் இடையறா தொடர்பு வைத்திருக்கின்றன. இப்பள்ளிகளின் உயிரோட்டமே பெற்றோர்தொடர்புதான். அரசு நடத்தும்பள்ளிகளில் பெற்றோர் தொடர்பு அவசியமில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
வெறும் 40 ரூபாயும், 50 ரூபாயும் மாதக்கட்டணமாக பெற்றுக்கொண்டு மாணவர்களை இப்பள்ளிகள் பயிற்றுவிப்பது குறிப்பிடத்தக்கது.
வாரம் ஒருமுறை நண்பகல் உணவாக இயற்கை உணவு கொண்டுவர மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மாணவர்களும் ஏற்று நடக்கிறார்கள்.
மறைந்துவரும் தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் இவற்றை ஒவ்வொரு செயலிலும் நிலைநிறுத்த தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் முயற்சித்து வருகின்றன.


தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, நாச்சியார்கோயில்.

1998 ஆம் ஆண்டு 22 குழந்தைகளுடனும் இரு ஆசிரியர்களுடனும் துவக்கப்பட்ட இப்பள்ளி தற்போது 75 குழந்தைகளுடனும் ஆறு ஆசிரியர்களுடனும் இயங்கிவருகிறது.

மொழி ஆர்வலர் ஒருவர் வாடகையின்றி கொடுத்த நிலப்பரப்பில் போதுமான கட்டிட வசதியுடன் இயங்கிவருகிறது. விளையாடுமிடம், கழிப்பிடவசதி அனைத்தும் இந்தப்பள்ளியில் போதுமானதாக உள்ளது. சுற்றுப்புற மக்களுக்கு பண்பாட்டுடன் கூடிய உயர்வான தமிழ்வழிக்கல்வியை அளித்துவரும் இப்பள்ளி மேலும் வளர்ச்சிபெற வாய்ப்பு உள்ளது.
தமிழர் உறவின்முறை அறக்கட்டளையின் நிர்வாகத்தில் இப்பள்ளி இயங்குகிறது. வாகனவசதி இருப்பின் இந்தப்பள்ளி இன்னும் சிறப்பாக வளர்ச்சியடையும்.
தொடர்பு முகவரி: திரு.கோ.ச.சோலை மாரியப்பன், தாளாளர், தமிழ்த்தாய் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, தமிழர் உறவின்முறை அறக்கட்டளை, கோவனூர் சாலை, நாச்சியார் கோயில்-612682 குடந்தை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தொலைபேசி எண்கள்:0435-2466165 web: www.geocities.com/thamiz e mail:
solaithamizh@yahoo.co.in

தாய்ததமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி, பாப்பாநாடு.
கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளி மனிதம் கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. திருமதி கா.தங்கம் அவர்கள் தாளாளராகவும், தலைமை ஆசிரியையாகவும் செயல்பட்டு வருகிறார். தமிழ்....தமிழர் பண்பாடு என்று ஓயாமல் உச்சரிக்கும் இவரது கணவர் திரு. இரா. காமராசு ஒத்துழைப்பு நல்கிவருகிறார். "மரங்களைப் பிடுங்கிநடுவதல்ல நம் பணி.......விதைகளைப்பதிந்து நடுவதே நம் பணி" என்பது இவரது முழக்கமாக உள்ளது. 85 குழந்தைகளுடனும், 10 ஆசிரியைகளுடனும் இப்பள்ளி இயங்கிவருகிறது. வாடகை நிலத்தில் போதுமான கட்டிடவசதியுடன் இப்பள்ளி இயங்கிவருகிறது. கழிப்பிட வசதி, விளையாட்டிடம் இவையெல்லாம் போதுமானவை. சுற்றுப்புற மக்களுக்கு பண்பாட்டுடன் கூடிய உயர்வான தமிழ்வழிக்கல்வியை அளித்துவரும் இப்பள்ளி மேலும் வளர்ச்சிபெற வாய்ப்பு உள்ளது. வாகன வசதி இருப்பின் இன்னும் வளர்ச்சிபெற வாய்ப்புள்ளது.
தொடர்பு முகவரி: திருமதி கா.தங்கம், தாளாளர், மனிதம் கல்வி அறக்கட்டளை, மாரியம்மன் கோயில் தெரு, பாப்பாநாடு, தஞ்சாவூர் மாவட்டம்-614626 தொலைபேசி எண்கள்: 9943059216, 9943059218, 9943059219


தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி, பட்டுக்கோட்டை.
கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இப்பள்ளி, தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பாக அறங்காவலர் குழுவினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் தலைவராக திரு. இரா.கலைச்செல்வன் அவர்களும், தாளாளராக திரு.சி.திருஞானம் அவர்களும் இயங்குகின்றனர். ஆசிரியப்பணியில் அனுபவம் பெற்ற கல்வியாளர் திரு. புரவலன் அவர்கள் செயலர் பொறுப்பில் பணியாற்றுகிறார். வாடகை நிலத்தில் சொந்தக்கட்டிடத்துடன் இயங்கும் இந்தப்பள்ளி தற்போது 60 மாணவர்களுடனும் பத்து ஆசிரியர்களுடனும் இயங்கிவருகிறது. வரும் கல்வியாண்டிலிருந்து வசதிகள்நிறைந்த புதிய இடத்தில் வாகனவசதியுடன் இப்பள்ளி செயல்பட உள்ளது. மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்பு முகவரி: தாளாளர், தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி, 359-அ, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, பட்டுக்கோட்டை-614 602
தொலைபேசி எண்கள்: 9443448406, 9443662414, 9443617299, 9944926009

தமிழக அரசு என்ன செய்யவேண்டும்?

தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள் அரசின் கல்வி அதிகாரிகளால் அவ்வப்போது பார்வையிடப்பட்டு குறிப்புகள் எழுதப்படுகின்றன. இப்பள்ளிகளின் மாற்றுச்சான்றிதழ்கள் அரசுப்பள்ளிகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றை சிறப்புப்பள்ளிகளாக கருதி தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இங்கு படிக்கும் பிள்ளைகளும் தமிழரின் பிள்ளைகளே. மற்ற பள்ளிகளுக்கு அரசு வழங்கிவரும் இலவச பாடப்புத்தகங்களை தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகளுக்கும் வழங்கவேண்டும். தமிழகத்தின் எல்லாபள்ளிகளிலும் குழந்தைகள் மதிய உணவு சாப்பிடும்போது தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் மட்டும் பசியோடு இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
தமிழால் வளர்ந்தோம் நாம்!
தமிழையும் தமிழரையும் வாழவைப்பது நியாயம்தானே!

தகவல் திரட்டியவர் மற்றும் தொகுத்தவர்:
மு.குருமூர்த்தி, cauverynagarwest@gmail.com


Saturday, March 29, 2008

தஞ்சாவூர் பீரங்கி -Canon of Thanjavur-

கி.பி. 1600க்கும் 1645க்கும் இடைப்பட்ட காலத்தில் இரகுநாத நாயக்கரின் காலத்தில் தஞ்சையில் செய்யப்பட்ட இந்த பீரங்கி தஞ்சாவூர் நகரத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் படைக்கலன்களில் முதன்மையாக இருந்ததால் உள்ளூர்மக்கள் 'இராஜகோபாலா' என்று இறைவனின் பெயரிட்டு அழைத்துவந்துள்ளனர். தஞ்சாவூர் கீழவாசலில் இப்போதும் முதன்முதலாக நிறுவப்பட்ட திசையிலேயே இந்த பீரங்கி இருக்கிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் இது பாதுகாக்கப்பட்டுவருகிறது. தஞ்சாவூர் அரண்மனையைப் பற்றிய ஒரு நூலில் நெருப்பைக்கக்கும் குழாய்வடிவ ஆயுதம் இருந்ததாக கூறப்படுகிறது. அக்காலத்தில் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள மானோஜிப்பட்டி கிராமத்தில் இரும்பு உலைக்கொல்லர்கள் இருந்ததாகவும் இந்த பீரங்கி அங்கே செய்யப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
நூர்வார், மூஷிராபாத், டாக்கா, பிஷ்ணுபூர்,பீஜப்பூர், குல்பர்கா, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மட்டுமே Forgewelding தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பீரங்கிகள் உள்ளன. 'Forgewelding' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பீரங்கிகளில் உருவத்திலும் எடையிலும் தஞ்சாவூரில் உள்ள பீரங்கிதான் உலகிலேயே முதலிடத்தை வகிக்கிறது என்பது ஒரு சிறப்பு.

Forgewelding என்றால் என்ன?
ஒரு உலோகத்தை சூடாக்கும்போது வெளிச்சுற்றில் உள்ள எலக்ட்ரான்கள் உட்கருவுடன் உள்ள ஈர்ப்புவிசையை இழந்துவிடுகின்றன. சரியான வெப்பநிலையில் மற்றொரு உலோகத்துடன் அழுத்தம் கொடுத்தால் இரண்டு உலோகத்துண்டுகளிலும் உள்ள எலெக்ட்ரான்கள் குறுக்குப்பாய்ச்சல் செய்து பிணைந்து கொள்கின்றன.
இந்த பீரங்கியில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளைப்பற்றி சரியான தகவல் இல்லை. எனினும் கணக்கீட்டின்படி இரும்புகுண்டுகளாக இருப்பின் 1,000 கிலோகிராம் என்றும், கல் உருண்டைகளாக இருப்பின் 300 கிலோகிராம் என்றும் தெரியவருகிறது. இந்த பீரங்கியின் மொத்த எடை 22 டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பீரங்கியைப்பற்றிய தொழில்நுட்பவிபரங்களை தெரிந்துகொள்ள விருப்பமா? மேலும் படியுங்கள்......
The Thanjavur iron cannon rests on three concrete supports, about 60 cm thick, 120 cm high, and 2.25 m apart from each other.
The cannon is a muzzle-loading type, wherein the gunpowder and the projectile object are loaded from the muzzle (i.e., front end).
The cannon is 751.5 cm in length from end to mouth, including the 31.5 cm projection at the end of the barrel. The outer and inner diameters of the gun barrel are 93 cm and 63 cm, respectively.
................ the minimum weight of the cannon is more than 22 t.
The front end of the cannon indicates that 39 iron strips were folded out from inside the cannon. Each strip is about 1.5 cm thick and 5 cm wide.

These iron staves continue longitudinally through the length of the inner bore of the barrel to provide a smooth inner surface to the cannon barrel.
The front end also reveals that concentric layers of iron rings were used to construct the barrel of the cannon.
Four concentric rings are clearly visible in the front plane of the cannon barrel.
The complete barrel is made up of three rings, hooped over the iron staves. A detailed dimensional analysis found that the width of the individual rings along the length of the cannon was not constant. Generally, rings of smaller widths were also located along the length of the cannon. In this regard, it is also important to note the systematic placing of smaller rings between larger rings at two specifi c locations, just behind the muzzle of the barrel and in the middle of the cannon. In these locations, the smaller rings seem to have been placed in a very calculated manner.Therefore, the design of the cannon required the use of smaller width rings not only to close the gaps between the larger width rings, but also to ensure greater toughness for the barrel.At periodic intervals along the length of the cannon, additional external rings are on the external surface of the cannon.(www.Lehigh.edu/~inarcmet)
எண்ணமும் எழுத்தும்:மு.குருமூர்த்தி
cauverynagarwest@gmail.com

Tuesday, March 25, 2008

புகழ்பெற்ற மாணவர் விடுதிகள்-FAMOUS HOSTELS -ORATHANAD-RAJAMADAM

ஒரத்தநாடு, ராஜாமடம், நீடாமங்கலம், திருவையாறு ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிக்கூடங்களுடன் மாணவர் விடுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விடுதிகளுக்கு வயது 238 ஆண்டுகள் என்றால் நம்பமுடிகிறதா? ஆம்! இவையனைத்தும் தஞ்சாவூரை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களின் மனைவிமார்களால் நிர்வாகம் செய்யப்பட்டதாக 1801ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அப்போதைய தஞ்சாவூர் அரசர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் இருந்து தெரியவருகிறது.
இதைப்போன்றதொரு மாணவர் விடுதி 'சிரேஸ் மாணவர் இல்லம்' என்ற பெயரில் தஞ்சாவூர் அரசர் பள்ளியுடன் இணைக்கப்பட்டு இப்போதும் செயல் பட்டு வருகிறது.
இங்கு ஏழைமாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு கல்வியுடன், உறைவிடம், உணவு, மற்றும் இதர வசதிகள் அளிக்கப்படுவது சிறப்பு.
சத்திரம் இலாகாவின் நிர்வாகத்தில் செயல்பட்டுவருகின்ற இந்த விடுதிகளின் நிர்வாகத்தை செம்மைப்படுத்திய பெருமை நீதிக்கட்சியைச்சேர்ந்த சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களைச் சேரும். ராஜாமடம் மற்றும் ஒரத்தநாடு சத்திரம் விடுதியில் தங்கிப்பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொதுவாழ்விலும், அரசு நிர்வாகத்திலும், தனியார் துறையிலும் இன்று உலகமெங்கும் விரவி இருக்கிறார்கள்.இந்த விடுதிகளின் காப்பாளர்களாக பணிபுரிந்தவர்கள், மற்றும்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் நேரடி அனுபவங்கள் வருங்காலத்தில் இந்த வலைப்பூவில சேர்க்கப்படும்.உங்கள் நண்பர்கள், பெற்றோர், உறவினர் எவராவது இந்த விடுதிகளுடன் தங்களுடைய நினைவை அல்லது தொடர்பை பகிர்ந்து கொள்ளக்கூடும்.
1801 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அப்போதைய தஞ்சாவூர் மகாராஜா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம் இந்த சத்திரங்களைப்பற்றிய சுவையான தகவல்களைத்தருகிறது.
இராமேஸ்வரம் செல்லும் பாதையில் இந்த சத்திரங்கள் அமைந்திருந்தன.
இராமேஸ்வரத்திற்கு யாத்திரை செய்வோருக்கு உதவிசெய்வதற்காகவென்றே இந்த சத்திரங்கள் செயல்பட்டன.
ஒவ்வொரு சத்திரத்திற்கும் இணைப்பாக பகோடாக்கள், அன்னதானக்கூடங்கள், பள்ளிக்கூடங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
சத்திரங்களை நிர்வகிக்கும் செலவிற்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
நிலங்கள் யாவும் மன்னரின் மனைவியர் பேரில் வழங்கப்பட்டிருந்தன.
மன்னரின் மனைவியர்களில் மிகவும் மூத்தவர் சத்திரநிர்வாகத்தின் பொறுபில் இருப்பார். அவர் இறக்கும்போது வரிசையில் உள்ள அடுத்த மூத்தவர் பொறுப்பிற்கு வருவார்.
சத்திரங்கள் யாவும் மன்னரின் வீட்டின் ஒருபகுதியாக கருதப்பட்டது.
சத்திரங்களில் அளிக்கும் தருமகாரியங்கள் யாவும் மன்னர் குடும்பத்தில் நடப்பவையாகவும், குடும்பகவுரமாகவும் கருதப்பட்டது.
தர்மகாரியங்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலங்களில் அமைச்சர்களோ, அவர்களின் மகன்களோ, அவர்களின் வாரிசுகளோ தலையிட உரிமையில்லை.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் நாற்பதாயிரம் யாத்ரீகர்கள் இந்த பாதையில் இருவழிகளிலும் பயணம் செய்தனர்.
காசி, டெல்லி, ஒளரங்காபாத், பூனா இங்கிருந்தெல்லாம் யாத்ரீகர்கள் இந்த வழியே இராமேஸ்வரத்திற்கு சென்றுவந்தனர்.
பிராமணர்களில் இருந்து பறையர்கள்வரை ஜோகு, ஜங்கம், அதிதி, பைராகி ஆகிய எல்லோருக்கும் சமைத்தசோறு இங்கு வழங்கப்பட்டது.
சொந்தமாக சமைத்து சாப்பிட விரும்புவோருக்கு அரிசியும், மற்ற உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டன.
நள்ளிரவில் ஒரு மணி அடிக்கப்படும். அதுவரை இந்த உணவு வழங்கப்படும். அதுவரை உணவு வாங்கிக்கொள்ளாதவர்களுக்கு நினைவுபடுத்துவதற்காக இந்த மணியோசையாம்.
யாத்திரையை தொடரமுடியாதவர்கள் சத்திரத்திலேயே விரும்பும்வரை தங்கிக்கொள்ளலாம்.
ஒவ்வோர் சத்திரத்திலும் நான்கு வேதங்களையும் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும், ஒரு தலைமை ஆசிரியரும் நியமிக்கப்பட்டார்.
வீக்கம், விஷக்கடி, மற்றும் நோய்கள் இவற்றை குணப்படுத்துவற்காக ஒரு வைத்தியரும் நியமிக்கப்பட்டார்.
சத்திரத்தில் தங்குவோர் தலைமை ஆசிரியரின் பொறுப்பில் பாதுகாக்கப்பட்டார்கள்.
சத்திரத்தில் தங்கும் யாத்ரீகர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பத்திய சாப்பாட்டுடன், கனிவான உபசரிப்பும், மருந்துகளும் வழங்கப்பட்டன. இறந்துபோனவர்களின் உடல்கள் அவர்களுடைய சாதி வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்டன.
பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது.
இதுதவிர நான்கு நாட்களுக்கு ஒருமுறை தேய்த்துக்குளிக்க எண்ணெயும்,
தேவைப்படும்போது மருத்துவ வசதியும், துணிமணிகளும் வழங்கப்பட்டன.
மேலும் படிக்கவிரும்பும் ஆசிரியர்களுக்கு தேவையான நூல்கள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் கற்றுத்தேர்ந்தபிறகு அவர்களுடைய திருமண செலவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந்த சத்திரங்களில் கைக்குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டது.
கர்ப்பிணிப்பெண்கள் கனிவுடன் பரிபாலிக்கப்பட்டனர்.
சத்திரத்தில் இருக்குபோது பிரசவம் நடந்தால் செலவுமுழுவதும் சத்திரநிர்வாகத்தினுடையது
அவர்களுக்குத்தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு மூன்றுமாதங்கள்வரை சத்திரத்தில் தங்க அனுமதிக்கப்பட்டார்கள். தந்தையை இழந்த பிராமணச்சிறுவர்கள் வறுமையின்காரணமாக பூணூல் அணிவிக்கும் சடங்கு நடத்தப்படாமல் இருந்தால் நிதிஉதவி அளிக்கப்பட்டது.
சத்திரத்திற்கென வழங்கப்பட்ட நிலங்கள் வளம் குன்றியவையாக இருந்தன.
இந்த நிலங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம் எந்தக்காலத்திலும் அரசாங்க வருமானமாக கருதப்படவில்லை என்பது மராட்டிய அரசர்களின் கொடைத்தன்மைக்கு சான்று.
மேலும் இந்த சத்திரங்களில் அளிக்கப்பட்ட தரும காரியங்களுக்கு எந்த விதமான பங்கமும் ஏற்படக்கூடாது என்பதில் மராட்டிய அரசர்கள் வெகு கவனமாக இருந்திருக்கின்றனர்.
பஞ்சம் ஏற்பட்டு சத்திரத்திற்கு வருவாய் அளித்துவந்த நிலங்கள் சரியாக விளையாமற்போகும் காலங்களில் வேறு அரச வருமானங்களில் இருந்து சத்திரங்களின் பரிபாலன நிதி வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் வெள்ளையர் ஆட்சிக்கு வந்தபிறகு, பஞ்சம் காரணமாக இந்த சத்திரங்களுக்கு வெள்ளை அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று அதிகாரம் இழந்த தஞ்சை மராட்டிய அரசர் எழுதிய கடிதத்தை கண்ணீருடன் தான் நாம் படிக்கவேண்டும்.
"As the lands annexed to the chetrums is in general very poor, it happens frequently
from a deficiency of rain, that they do not produce sufficient for the expences.
When this is the case my anxiety to prevent any diminution of these excellent charities, which I consider
as the most honourable appendage of my dignity, has always induced me to send to them
from the circuar both grain and money sufficient to make up the deficiency. After Mr.
Harris was appointed to the management of that soubah, he must remember that I applied to
him for a considerable quantity of paddy at different times for the use of the chetrums.
The chetrums are not of recent foundation. The chetrum of Munmaligoody and
some others were founded by my ancestor Pretaupsing above forty years ago, and have
continued to distribute their charities ever since. My father the late Tulsagee Rajah, twenty five
or thirty years ago founded the chetrums of Minmushale, Salutehnahoapoor, and Rajyamul.
None of these chetrams were founded in the reign of Amersing or by me since my accession.
Although these charitable institutions did not originate with me, I consider them as attached to
my house, and essential to my reputation and happiness. The Tanjore country is celebrated
over all world for its charities, it is called Dhermraje, and I consider the reputation which
reverts upon me through all countries from this appellation, as the most honorable
distinction of my rank. The revenues appropriated to the support of the charities of my
ancestors, and my Tulsajee Rajah, have never been included in the public revenue of the
country. They invariably cherished and supported the charities. It is my earnest wish to
do the same. The superintendence of them has always descended from the older to the
younger queen. It has remained in the hands of the senior until her death and then
descended to the wife of the reigning Rajah. I have a perfect confidence that this custom of
my ancestors will not be deviated from , and that I shall not suffer the disgrace of seeing it
abolished in my reign.
The perwangys issued by Pretaupsing and Tulsajee previous to the capture of the fort
cannot be found. After the capture of the fort the Nabob plundered the place, and carried off all
the records, in the the dufter. From this circumstance no records prior to that date remain.
After the restoration of the fort, the late Tulsajee Rajah issued new perwangee for all the ancient
charitable institutions as well those established by himself. These are in my possession.
There is a regular grant also for Chetoobaba chetrum.
What can I write more.
20th January 1801

எண்ணமும் எழுத்தும்: மு.குருமூர்த்தி,
cauverynagarwest@gmail.com