Wednesday, April 2, 2008

தடம் பதிக்கவேண்டும்...தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள்........THAAITHAMIZH NURSERY AND PRIMARY SCHOOLS

தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தின் புதிய வரவல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயக்கமாக விரிவடைந்து வேரூன்றத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 63 தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவை காலத்தின் கட்டாயம்.
இவை எண்ணிக்கையில் குறைவானவை. எளிமையானவை; மேலும் உண்மையான தமிழுணர்வில் முகிழ்த்து எழுந்தமையால் வலிமையானவை. இவை ஆல்போல் தழைக்கும் காலம் தொலைவில் இல்லை. தமிழ் நாட்டில் அரசின் நேரடி நிர்வாகத்திலும், தனியாரின் மறைமுக நிர்வாகத்திலும் பட்டிதொட்டியெங்கும் தமிழ் வழியில் கற்பிக்கும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. போதாக்குறைக்கு ஆங்கிலவழியில் கற்பிக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் ஒத்த எண்ணிக்கையில் வளர்ந்துள்ளன. மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் வளர்ச்சியை ஊடகங்கள் புற்றீசல்களுக்கு ஒப்பிட்டாலும் ஊடகங்களின் சொந்தக்காரர்களே மெட்ரிக் பள்ளிகளை ஆதரிப்பது நாமெல்லாம் அறிந்த ஒன்று.

தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகளுக்கு அவசியம் என்ன?

அருகாமையில் உள்ள அரசுப்பள்ளிகள் முழுஈடுபாட்டுடன் கற்பித்தல் பணியை செய்யாதபோது ஏழை எளியமக்கள் தொலைதூர பள்ளிகளுக்கு தம்முடைய குழந்தைகளை அனுப்ப இயலாது போகிறது. குறைந்த செலவில் தங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வியுடன் பண்பாட்டை சொல்லித்தரக்கூடிய ஒரு மாற்று ஏற்பாடு ஏழை மக்களுக்கு தேவைப்படுகிறது. அந்தந்தப்பகுதியில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் துவங்கி நடத்தும் பள்ளிகளே தாய்த்தமிழ் பள்ளிகள்.

மரங்களைப் பிடுங்கி நடுவதல்ல நம் பணி
விதைகளைப் பதிந்து வளர்ப்பதே நம் பணி

என்ற முழக்கத்துடன் தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே இப்பள்ளிகளை நடத்திவருகின்றனர்.
தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகளின் நோக்கம் மாசு மருவற்றது. அரசின் பாடநூல்கள்தான் இங்கும் கற்பிக்கப்படுகின்றன. அரசின் தேர்வுமுறையும் அரசு விதிக்கும் தேர்ச்சிவிதிகளும் இங்கு பின்பற்றப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயக்கமாக செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளின் வழிவந்த மாணவர்கள் தற்போது ஒன்பதாம் வகுப்பில் சிறப்பான தேர்ச்சி பெற்றுவருகிறார்கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மெட்ரிக்பள்ளிகளின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் அளிக்கும் ஆதரவின் அடிப்படையே ஆங்கிலமொழியில் தம்முடைய பிள்ளைகள் பேச வேண்டும் என்ற ஆவல்தான்.
ஆங்கிலம் படித்தல் வேறு........ஆங்கில வழியில் பிறபாடங்களை படித்தல் வேறு.......என்பதை உணராமற்போவதன் விளைவு இது.
தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழியாக கற்பிக்கப்படுகிறது. மற்ற பாடங்கள் தமிழ்வழியில் கற்பிக்கப்படுவதால் மாணவர்களின் சிந்தனைத்திறன் மேம்படுகிறது. மாணவர்கள் ஆங்கில அறிவிலும், பாட அறிவிலும் ஒருசேர முதன்மைபெறுகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் பட்டுக்கோட்டை, பாப்பாநாடு, நாச்சியார்கோவில், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் இயங்கிவருகின்றன. அனைத்துப்பள்ளிகளும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை பின்பற்றிவருகின்றன.

மற்ற பள்ளிகளிலிருந்து இவை எவ்வாறு வேறுபடுகின்றன?

மாணவர்கள் அரும்பு, மொட்டு, மலர் என்று வயதுவாரியாக பிரித்தறியப்படுகின்றனர்.
கையுறை, காலுறை, கழுத்துப்பட்டை இல்லாத எளிமையான எடுப்பான சீருடை.
தலைமை ஆசிரியரையும் ஆசிரிய ஆசிரியைகளையும் அத்தை, மாமா, அக்காள், அண்ணன் என்ற உறவு முறையில் அழைக்கின்றனர்.
மாணவர்களை வாடா, போடா என்று அழைக்கும் கொடுமை இல்லை.
மாணவர்களை அடிக்கும் வன்முறை இல்லை.
"சுந்தரம் நீங்கள் சொல்லுங்கள்"............."கார்த்திகா இங்கே பாருங்கள்" என்று ஆசிரியர்கள் மாணவர்களை அழைக்கின்றனர்.
மாணவர்கள் சந்திக்கும்போது கைகூப்பி "வணக்கம் வெற்றி உறுதி" என்றும், மாணவர்கள் பிரிந்து செல்லும்போது கட்டைவிரலை உயர்த்தி "நன்றி மீண்டும் சந்திப்போம்" என்றும் இயல்பாக கூறும்போது நம்முடைய நெஞ்சு நிமிர்ந்துகொள்கிறது.
பாடத்துடன் இயல்பான முறையில் விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.
திங்கள், புதன், வெள்ளி ஆகியநாட்களில் யோகாசனம் கற்பிக்கப்படுகிறது.
செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் ஆங்கில பேச்சுப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
உரிய வயதிற்குப்பிறகே எழுத்துப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு புத்தகமூட்டையை சுமக்கும் பயிற்சி இங்கு தரப்படுவதில்லை.
பெற்றோருடன் இப்பள்ளிகள் இடையறா தொடர்பு வைத்திருக்கின்றன. இப்பள்ளிகளின் உயிரோட்டமே பெற்றோர்தொடர்புதான். அரசு நடத்தும்பள்ளிகளில் பெற்றோர் தொடர்பு அவசியமில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
வெறும் 40 ரூபாயும், 50 ரூபாயும் மாதக்கட்டணமாக பெற்றுக்கொண்டு மாணவர்களை இப்பள்ளிகள் பயிற்றுவிப்பது குறிப்பிடத்தக்கது.
வாரம் ஒருமுறை நண்பகல் உணவாக இயற்கை உணவு கொண்டுவர மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. மாணவர்களும் ஏற்று நடக்கிறார்கள்.
மறைந்துவரும் தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் இவற்றை ஒவ்வொரு செயலிலும் நிலைநிறுத்த தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் முயற்சித்து வருகின்றன.


தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, நாச்சியார்கோயில்.

1998 ஆம் ஆண்டு 22 குழந்தைகளுடனும் இரு ஆசிரியர்களுடனும் துவக்கப்பட்ட இப்பள்ளி தற்போது 75 குழந்தைகளுடனும் ஆறு ஆசிரியர்களுடனும் இயங்கிவருகிறது.

மொழி ஆர்வலர் ஒருவர் வாடகையின்றி கொடுத்த நிலப்பரப்பில் போதுமான கட்டிட வசதியுடன் இயங்கிவருகிறது. விளையாடுமிடம், கழிப்பிடவசதி அனைத்தும் இந்தப்பள்ளியில் போதுமானதாக உள்ளது. சுற்றுப்புற மக்களுக்கு பண்பாட்டுடன் கூடிய உயர்வான தமிழ்வழிக்கல்வியை அளித்துவரும் இப்பள்ளி மேலும் வளர்ச்சிபெற வாய்ப்பு உள்ளது.
தமிழர் உறவின்முறை அறக்கட்டளையின் நிர்வாகத்தில் இப்பள்ளி இயங்குகிறது. வாகனவசதி இருப்பின் இந்தப்பள்ளி இன்னும் சிறப்பாக வளர்ச்சியடையும்.
தொடர்பு முகவரி: திரு.கோ.ச.சோலை மாரியப்பன், தாளாளர், தமிழ்த்தாய் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, தமிழர் உறவின்முறை அறக்கட்டளை, கோவனூர் சாலை, நாச்சியார் கோயில்-612682 குடந்தை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தொலைபேசி எண்கள்:0435-2466165 web: www.geocities.com/thamiz e mail:
solaithamizh@yahoo.co.in

தாய்ததமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி, பாப்பாநாடு.
கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இப்பள்ளி மனிதம் கல்வி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. திருமதி கா.தங்கம் அவர்கள் தாளாளராகவும், தலைமை ஆசிரியையாகவும் செயல்பட்டு வருகிறார். தமிழ்....தமிழர் பண்பாடு என்று ஓயாமல் உச்சரிக்கும் இவரது கணவர் திரு. இரா. காமராசு ஒத்துழைப்பு நல்கிவருகிறார். "மரங்களைப் பிடுங்கிநடுவதல்ல நம் பணி.......விதைகளைப்பதிந்து நடுவதே நம் பணி" என்பது இவரது முழக்கமாக உள்ளது. 85 குழந்தைகளுடனும், 10 ஆசிரியைகளுடனும் இப்பள்ளி இயங்கிவருகிறது. வாடகை நிலத்தில் போதுமான கட்டிடவசதியுடன் இப்பள்ளி இயங்கிவருகிறது. கழிப்பிட வசதி, விளையாட்டிடம் இவையெல்லாம் போதுமானவை. சுற்றுப்புற மக்களுக்கு பண்பாட்டுடன் கூடிய உயர்வான தமிழ்வழிக்கல்வியை அளித்துவரும் இப்பள்ளி மேலும் வளர்ச்சிபெற வாய்ப்பு உள்ளது. வாகன வசதி இருப்பின் இன்னும் வளர்ச்சிபெற வாய்ப்புள்ளது.
தொடர்பு முகவரி: திருமதி கா.தங்கம், தாளாளர், மனிதம் கல்வி அறக்கட்டளை, மாரியம்மன் கோயில் தெரு, பாப்பாநாடு, தஞ்சாவூர் மாவட்டம்-614626 தொலைபேசி எண்கள்: 9943059216, 9943059218, 9943059219


தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி, பட்டுக்கோட்டை.
கடந்த பத்து ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இப்பள்ளி, தமிழம் கல்வி அறக்கட்டளை சார்பாக அறங்காவலர் குழுவினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளையின் தலைவராக திரு. இரா.கலைச்செல்வன் அவர்களும், தாளாளராக திரு.சி.திருஞானம் அவர்களும் இயங்குகின்றனர். ஆசிரியப்பணியில் அனுபவம் பெற்ற கல்வியாளர் திரு. புரவலன் அவர்கள் செயலர் பொறுப்பில் பணியாற்றுகிறார். வாடகை நிலத்தில் சொந்தக்கட்டிடத்துடன் இயங்கும் இந்தப்பள்ளி தற்போது 60 மாணவர்களுடனும் பத்து ஆசிரியர்களுடனும் இயங்கிவருகிறது. வரும் கல்வியாண்டிலிருந்து வசதிகள்நிறைந்த புதிய இடத்தில் வாகனவசதியுடன் இப்பள்ளி செயல்பட உள்ளது. மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்பு முகவரி: தாளாளர், தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளி, 359-அ, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, பட்டுக்கோட்டை-614 602
தொலைபேசி எண்கள்: 9443448406, 9443662414, 9443617299, 9944926009

தமிழக அரசு என்ன செய்யவேண்டும்?

தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள் அரசின் கல்வி அதிகாரிகளால் அவ்வப்போது பார்வையிடப்பட்டு குறிப்புகள் எழுதப்படுகின்றன. இப்பள்ளிகளின் மாற்றுச்சான்றிதழ்கள் அரசுப்பள்ளிகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றை சிறப்புப்பள்ளிகளாக கருதி தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும். இங்கு படிக்கும் பிள்ளைகளும் தமிழரின் பிள்ளைகளே. மற்ற பள்ளிகளுக்கு அரசு வழங்கிவரும் இலவச பாடப்புத்தகங்களை தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகளுக்கும் வழங்கவேண்டும். தமிழகத்தின் எல்லாபள்ளிகளிலும் குழந்தைகள் மதிய உணவு சாப்பிடும்போது தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் மட்டும் பசியோடு இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
தமிழால் வளர்ந்தோம் நாம்!
தமிழையும் தமிழரையும் வாழவைப்பது நியாயம்தானே!

தகவல் திரட்டியவர் மற்றும் தொகுத்தவர்:
மு.குருமூர்த்தி, cauverynagarwest@gmail.com


No comments: