Sunday, April 6, 2008

கும்பகோணம் வெற்றிலை KUMBAKONAM BETAL LEAF

தஞ்சாவூர்க்காரர்கள் வெற்றிலைப்பிரியர்கள். சரியாகச்சொல்வதானால் வெற்றிலை வெறியர்கள். அவர்கள் வெற்றிலை போடும் அழகே தனி. வெற்றிலையை வலிக்காமல் எடுப்பதும், அதற்கு வலிக்காமல் முதுகைத் தடவிக்கொடுப்பதும், சுண்ணாம்பை நடுவிரல் நுனியால் ஓவியம் வரைவதுபோல் தீட்டுவதும், மெதுவாக மடக்குவதும், பாக்கை வாசனை பார்ப்பதுவும்,......போதும்.........இதெல்லாம் எதற்காக தெரியுமா?........அடுத்து செய்யப்போகும் காரியத்தை அலசி ஆராய்வதற்காகத்தான்....

வெற்றிலைக்கும் நமக்கும் தொடர்பு அதிகம். கல்யாணம் தொடங்கி காட்டுக்குப் போகும்வரை வெற்றிலை நம்முடன் கூடவே வரும். தமிழ்நாட்டில் கும்பகோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது. இத்தனை ஊர்கள் இருக்கும்போது வெற்றிலைக்கு கும்பகோணத்தின் மேல் மட்டும் காதல்!
வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். கும்பகோணத்திற்கு வந்த முதல் காம்பு எந்த ஊரிலிருந்து வந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராவது நிச்சயம்.

கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள். இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் இவர்களுக்கெல்லாம் கற்பனை ஊற்று சுரக்க வெற்றிலையும் ஒரு காரணமாம். விஞ்ஞானத்துக்கும் எட்டாத காரணம் என்று வியப்பாக இருக்கிறதல்லவா!

வெற்றிலைபோடும் ரசனையை வெற்றிலையின் ரசிகர்களால் தான் நன்றாக வெளிப்படுத்தமுடியும். தஞ்சாவூர் தந்த எழுத்தாளர் ஜானகிராமன் எழுதிய 'வேதாந்தியும் உப்பிலியும்' என்றொரு சிறுகதை. வெற்றிலை போடுபவருக்கும், வெற்றிலை வாங்குபவருக்கும் நடக்கும் உரையாடலைப் படியுங்கள். நீங்களும் வெற்றிலையின் ரசிகராகிப் போவீர்கள்!

"நேத்து ஒரு கவுளி கொடுத்தே......அதென்ன வெத்தலையா கறிவேப்பிலையா? எல்லாம் துக்கினியூண்டு, துக்கிணியூண்டு.....! சுண்ணாம்புக்கலயத்தை கழுத்தில் கட்டிக்கவேண்டியிருந்தது. போதும் போதாத்துக்கு ஒரு மருமான் வந்து சேர்ந்தான் மாயவரத்துலேர்ந்து! ஒரு மணிக்கு கால் கவுளின்னு
அரைத்துத்தீர்த்துப்பிட்டான்!"

"மாயவரத்து ஆளுங்களுக்கு காப்பி கொடிக்கால் வெத்தல போட்டுப்பழக்கம். நர...நரன்னு மாடு கடிக்கிறாப்புல கடிக்கணும். துருப்பிடிச்ச டின்னுகணக்கா......கருப்பா....மொத்தமா இருக்கும். இந்தமாதிரி குஞ்சுங்களெ எங்க கண்டிருப்பாங்க! இத வாயிலெ போட்டா புள்ளியார்பட்டி வெள்ளரிப்பிஞ்சு. இதுக்கு பல்லா வேணும்? பொக்க வாயெ ஒரு தடவெ அப்படி லேசா அசைச்சிட்டாலே அப்படியே அரைஞ்சு அமிர்தம் ஊறுமே......."

"அது சரிய்யா....குஞ்சு, குஞ்சுன்னு சுண்ணாம்புக்கலயத்தையேவா கழுத்துல கட்டிக்கவிடறது.....? நீயே பாரு. தோ....இந்த உள்ளங்கையிலே மூணு வெத்தலை வெச்சுண்டுட்டேன். இந்த வெத்தலைய பரமக்குடிக்காரன் மாதிரி நிறையிலே வாங்கினாத்தான் கட்டும். இப்படி எண்ணி எண்ணி வாங்கினா நூறு வெத்தல நாலு தடவைக்குத்தான் வரும்!"
நன்றி: தினமணி
தொகுப்பு:மு.குருமூர்த்தி cauverynagarwest@gmail.com

No comments: